மணிப்பூர் கலவரம் மாணவர்கள் - பாதுகாப்பு படை மோதல் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை 'கட்'
மணிப்பூர் கலவரம் மாணவர்கள் - பாதுகாப்பு படை மோதல் 5 நாட்களுக்கு இன்டர்நெட் சேவை 'கட்'
ADDED : செப் 11, 2024 01:45 AM

இம்பால், மணிப்பூர் டி.ஜி.பி., மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை பதவி நீக்கம் செய்யக் கோரி, தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும், கவர்னர் மாளிகையை நோக்கி மாணவர்கள் பேரணி நடத்தினர். தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தை பாதுகாப்புப் படையினர் கலைத்தனர்.
முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், மீண்டும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கடந்த முறை போலல்லாமல், இந்த முறை, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதமேந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இது, பாதுகாப்புப் படையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்க தவறியதற்காக, மாநில டி.ஜி.பி., மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, இம்பாலில் உள்ள கவர்னர் மாளிகையை நோக்கி மாணவர் அமைப்பினர், நேற்று முன்தினம் பேரணி சென்றனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும், கவர்னர் மாளிகையை நோக்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி சென்றனர். அவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது, மாணவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் கலைத்தனர். மேற்கு இம்பால் மாவடத்திலும் பல்கலை மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, மாணவர்களின் போராட்டத்தை கருதியும், சமூக வலைதளங்களில் வன்முறையை பரப்பும் நோக்கில் செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கவும், மணிப்பூர் முழுதும் ஐந்து நாட்களுக்கு இன்டர்நெட் சேவையை முடக்கி, அம்மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.
மணிப்பூர் போலீஸ் ஐ.ஜி., ஜயந்தா சிங் கூறியதாவது:
மணிப்பூரில் நடந்த தாக்குதல்களில் ராக்கெட், ட்ரோன் ஆகியவை பயன்படுத்தப்படவில்லை என, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இது தவறான தகவல். தாக்குதலுக்கு ஆளான குடியிருப்புகளில் இருந்து அதிநவீன ராக்கெட்டின் வால் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக மணிப்பூருக்கு மேலும், 2,000 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

