சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் அதிரடிகாங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு... ஆயுள் தண்டனை!
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் அதிரடிகாங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு... ஆயுள் தண்டனை!
ADDED : பிப் 26, 2025 02:09 AM

புதுடில்லி,   டில்லியில், 1984ல் நடந்த சீக்கியருக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன் குமாருக்கு, 79, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமராக இருந்த காங்.,கின் இந்திரா, 1984ல் சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, டில்லியின் பல இடங்களில் சீக்கியருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விசாரித்த நானாவதி கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், 2,733 பேர் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, 587 எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில், 240 எப்.ஐ.ஆர்.,கள், கண்டுபிடிக்க முடியவில்லை என்று முடித்து வைக்கப்பட்டன. மேலும், 250 எப்.ஐ.ஆர்.,களில், அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மொத்தத்தில், 28 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில், 400 பேர் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், 50 பேர் மீது மட்டுமே கொலை உள்ளிட்ட பிரிவுகளில் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது, 20 வழக்குகள் டில்லி நீதிமன்றங்களில் விசாரணை நிலையில் உள்ளன.
சீக்கியருக்கு எதிரான வன்முறையைத் துாண்டியதாக, காங்கிரசின் முன்னாள் எம்.பி.,யான சஜ்ஜன் குமார் மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த 1984 நவ., 12ல் பாலம் காலனியில், ஐந்து சீக்கியர் கொலை தொடர்பான வழக்கில் அவருக்கு, உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்துள்ள வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதைத் தவிர, மேலும் இரண்டு வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும், இரண்டு வழக்குகள் விசாரணை நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், 1984 நவ., 1ல் டில்லி சரஸ்வதி நகரில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த டில்லி சிறப்பு நீதிமன்றம், சஜ்ஜன் குமார் குற்றவாளி என, கடந்த 12ம் தேதி அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அதிகபட்சம் மரண தண்டனை விதிக்க முடியும். மரண தண்டனை விதிக்கக்கூடிய வழக்கில் குற்றவாளிகளின் மனநலம் தொடர்பான மருத்துவ அறிக்கையை பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மருத்துவ அறிக்கை பெறப்பட்டது.
சஜ்ஜன் குமாருக்கு மரண தண்டனை விதிக்க மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், சஜ்ஜன் குமாரின் வயது, அவருக்கு உள்ள நோய் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் அதை நிராகரித்தது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், சஜ்ஜன் குமார் தற்போது திஹார் சிறையில் உள்ளார்.

