எல்லாம் நல்லபடியா முடியனும் : ஓட்டு இயந்திரத்திற்கு ஆரத்தி எடுத்த மகளிர் கமிஷன் தலைவி
எல்லாம் நல்லபடியா முடியனும் : ஓட்டு இயந்திரத்திற்கு ஆரத்தி எடுத்த மகளிர் கமிஷன் தலைவி
ADDED : மே 07, 2024 08:50 PM

மும்பை: லோக்சபா தேர்தலில் இன்று மஹாராஷ்டிராவில் ஓட்டுச்சாவடி ஒன்றில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்த மாநில மகளிர் கமிஷன் தலைவர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்தது.
ஏழுகட்டங்களாக நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் இரண்டு கட்ட தேர்தல் நிறைவடைந்தது. இன்று 12 மாநிலங்களில் 93 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தல் நடந்தது.
இதில் மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பாராமதி தொகுதியில் சரத்பவாரின் சரத்சந்திர பவார் கட்சி வேட்பாளராக சுப்ரியா சுலேவும், தேசியவாத காங்., கட்சி தலைவர் அஜித்பவார் மனைவி சுனித்ராவும், போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பாராமதி லோக்சபா தொகுதிக்குட்பட்ட கடக்வாசாலா என்ற ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு துவங்கும் முன் எந்த பிரச்னையும் இல்லாம நல்லபடியா நடக்கனும் என ஓட்டு இயந்திரங்களுக்கு பெண் ஒருவர் சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்தார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றதையடுத்து நடத்திய விசாரணையில் ஆரத்தி எடுத்தவர் மஹாராஷ்டிரா தேசியவாத காங். கட்சியை சேர்ந்தவரும் மாநில மகளிர் கமிஷன் தலைவர் ரூபாலி சாகன்கர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளது.