ADDED : மார் 31, 2024 11:01 PM
பெங்களூரு: லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியான பின், 100 நாட்கள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்ற, தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. வேலைக்காக விண்ணப்பிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் 85 சதவீதம் குறைந்துள்ளது.
கர்நாடகாவில் இரண்டு கட்டங்களில், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், கிராமப்புறங்களின் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், தொண்டர்கள், விவசாய தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர்.
100 நாள் வேலை
கட்டுமான பணிகளுக்கு, குறிப்பாக 'நரேகா' எனும் 100 நாட்கள் வேலை உறுதி திட்டத்தின் பணிகளுக்கு, தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கூலி வேலைக்கு சென்றால், தினமும் 350 ரூபாய் வரை கிடைக்கிறது. ஆனால் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றால், அதை விட பல மடங்கு அதிகமாக கிடைக்கிறது. பிரியாணி, மதுபானமும் தாராளமாக வழங்கப்படுகிறது. எனவே பலரும் எந்த கட்சி அழைத்தாலும், பிரசாரம் செய்ய செல்கின்றனர்.
மாநிலத்தில் 5,963 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும், நரேகா திட்டத்தின் கீழ், பணிக்காக விண்ணப்பிக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை, 85 சதவீதம் குறைந்துள்ளது. 60 சதவீதம் கிராம பஞ்சாயத்துகளில், நரேகா திட்ட பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
பணிகளுக்கு முட்டுக்கட்டை
லோக்சபா தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால், நரேகா திட்டத்தின் சில பணிகளுக்கு, முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. சாலைகள் அமைப்பது, கட்டடங்கள் கட்டுவது உட்பட, கிராம பஞ்சாயத்துகள் சார்ந்த பணிகளை செய்ய அனுமதி இல்லை.
ஆனால் நரேகா திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தோட்டம் அமைப்பது; ஆடு, மாடுகள் கொட்டகை அமைப்பது; கழிப்பறைகள் கட்டுவது; விவசாய குளங்கள் அமைப்பது போன்ற பணிகளை செய்யலாம். இந்த பணிகளுக்கும் கூலியாட்கள் கிடைக்கவில்லை.
பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள் கூறியதாவது:
நரேகா திட்ட பணிகளுக்கு, கூலியாட்கள் பற்றாக்குறை ஏற்பட, லோக்சபா தேர்தல் மட்டுமல்ல, வேறு காரணங்களும் உள்ளன.
நிர்ணயித்த நேரத்தில், கூலி தொகை கிடைப்பதில்லை. மூன்று மாதங்கள் கூலி தொகை வரவில்லை.
பல பணிகள் பாக்கி உள்ளன. 'ஜாப் கார்டு' பெற்றுள்ள தொழிலாளர்களிடம், பணிகளை முடித்து தரும்படி, கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மன்றாடுகின்றனர். எனவே பணிகளை நிறுத்தி உள்ளோம்.
மாநிலத்தில் 2023 - 24ம் ஆண்டு, நரேகா திட்டத்தின் கீழ் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு, 475.59 கோடி ரூபாய் கூலி வழங்க வேண்டியுள்ளது. இந்த தொகையை வழங்கும்படி கோரி, மத்திய அரசுக்கு, மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.

