கர்னூல் மருத்துவமனையில் பிறந்து ஓரிரு நாளில்10 குழந்தைகள் சாவு: விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
கர்னூல் மருத்துவமனையில் பிறந்து ஓரிரு நாளில்10 குழந்தைகள் சாவு: விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
ADDED : செப் 03, 2011 01:44 AM

கர்னூல்:ஆந்திராவில் உள்ள கர்னூல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த இரு நாட்களில், பிறந்து சில மணி நேரங்களில், 10 குழந்தைகள் இறந்துவிட்டன.
இது குறித்து தகவல் அறிந்ததும், முதல்வர் கிரண்குமார் ரெட்டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு, கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்களில், பிறந்து சில மணி நேரங்களே ஆன 10 குழந்தைகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டன. எனினும், அடுத்த சில மணி நேரங்களிலேயே அனைத்துக் குழந்தைகளும் இறந்துவிட்டன.
மருத்துவமனை நிர்வாகம் மற்றும் டாக்டர்களின் அலட்சியப் போக்கு தான் குழந்தைகளின் பரிதாப மரணத்துக்குக் காரணம் எனக் கூறியபடி, குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் அரசியல் கட்சியினர், மருத்துவமனை வளாகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கர்னூல் மாவட்ட ஆட்சியர் ராம்சங்கர் நாயக், மருத்துவமனைக்கு நேரில் வந்து, பொதுமக்களுடன் பேச்சு நடத்தினார்.
அதன் பின், குழந்தைகளின் மரணம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் விவரம் கேட்டறிந்தார். அப்போது, உயிரிழந்த குழந்தைகளுக்கு ஏற்கனவே மூச்சுத் திணறல், எடை குறைவு பாதிப்புகள் இருந்தன. மேலும், நோய் முற்றிய பிறகே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாலும், சிகிச்சைப் பலனளிக்காமல் குழந்தைகள் இறந்துவிட்டன எனவும், மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில சுகாதார அமைச்சர் ரவீந்திரா ரெட்டி ஆகியோர், விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.