10 நக்சல்கள் சுட்டுக்கொலை சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை அதிரடி
10 நக்சல்கள் சுட்டுக்கொலை சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை அதிரடி
ADDED : மே 01, 2024 01:08 AM
நாராயண்பூர்,
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், மூன்று பெண்கள் உட்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
சத்தீஸ்கரில் உள்ள, 11 லோக்சபா தொகுதிகளுக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதன்படி, முதற்கட்டமாக கடந்த மாதம் 19ல், ஒரு தொகுதிக்கு மட்டும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், சத்தீஸ்கரின் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்டத்திற்கு இடையே உள்ள வனப்பகுதியில், நக்சல் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதியில், மாவட்ட ரிசர்வ் படையினருடன், எல்லை பாதுகாப்புப் படையினர் உட்பட மத்திய பாதுகாப்பு படையினர், நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அபுஜ்மத் என்ற பகுதி அருகே, பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியபோது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் நக்சல்கள் பயன்படுத்திய ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
தாக்குதலில் பலியான நக்சல்களின் அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடந்த மாதம் 16ம் தேதி, கான்கேர் மாவட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், 29 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.