தெலுங்கானாவில் குழந்தைகளை கடத்திய 11 பேர் அதிரடி கைது
தெலுங்கானாவில் குழந்தைகளை கடத்திய 11 பேர் அதிரடி கைது
ADDED : மே 29, 2024 12:42 AM

ஹைதராபாத், தெலுங்கானாவில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த 13 குழந்தைகளையும் மீட்டனர்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்கு, குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகளவு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இதையடுத்து தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி ஹைதராபாத் அருகே உள்ள ராச்சகொண்டா பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் திரிந்த மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்தனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, குழந்தை கடத்தலில் ஈடுபட்ட மேலும் எட்டு பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து பிறந்து ஒரு மாதம் முதல் 2 வயதுள்ள, ஒன்பது பெண் குழந்தைகள் உட்பட 13 குழந்தைகளை மீட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தைகளை, குழந்தைகள் நல காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
கைதான நபர்களிடம் நடத்திய விசாரணையில், டில்லி, புனே போன்ற பல்வேறு நகரங்களில் இருந்தும் தங்களுக்கு குழந்தைகள் கிடைப்பதாகவும், அவற்றை குழந்தையில்லா தம்பதியருக்கு 1.80 லட்சம் ரூபாய் முதல் 5.50 லட்சம் ரூபாய் வரை மதிப்பில் விற்பனை செய்ததாகவும் தெரிவித்தனர்.
இதுவரை 50 குழந்தைகள் வரை இவ்வாறு விற்பனை செய்ததாகவும் குறிப்பிட்டனர்.
இதையடுத்து பிடிபட்ட நபர்களை சிறையில் அடைத்த போலீசார், இக்கும்பலுடன் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர்.