ADDED : ஜூலை 17, 2024 11:21 PM
ஹூப்பள்ளி: 'ரீல்ஸ் வீடியோ' எடுத்தபடி, அரசு பஸ்சை ஓட்டிய டிரைவரால், இரண்டு காளை மாடுகள் இறந்தன. விவசாயி கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
ஹூப்பள்ளியில் இருந்து பாகல்கோட் நோக்கி நேற்று காலை, வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ் சென்றது.பஸ்சை ஓட்டிய டிரைவர் நாகண்ணா என்பவர், தனது மொபைல் போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்தபடி, பஸ்சை ஓட்டி சென்றார்.
ஹூப்பள்ளி அருகே குஷ்கல் பகுதியில் சென்றபோது, சாலையில் ஒரு மாட்டு வண்டி பஸ்சின் முன்பு சென்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத டிரைவர் நாகண்ணா மாட்டு வண்டி மீது பஸ்ஸை மோதினார். விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு காளைமாடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்தன.
மாட்டு வண்டியை ஓட்டி சென்ற விவசாயி மஞ்சுநாத், தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும், சுயநினைவு இழந்து கோமாவுக்கு சென்று விட்டார்.
விபத்து தொடர்பாக டிரைவர் நாகண்ணாவிடம், ஹூப்பள்ளி ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.