ADDED : மார் 01, 2025 01:27 AM

தானே: மஹாராஷ்டிரா மாநிலம் தானே அருகே, நடுக்கடலில் சென்ற படகில் தீ விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய மீனவர்கள் 20 பேரை, கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் தானே அருகே அலிபாக் பகுதியைச் சேர்ந்தவர், ராகேஷ் மூர்த்தி. இவருக்கு சொந்தமான படகில் நேற்று, 20 மீனவர்கள் மீன்பிடிக்க நடு கடலுக்கு சென்றனர். அவர்கள் சென்ற படகில் உள்ள பேட்டரி வயர்களில் மின் கசிவு ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட தீப்பொறி படகில் குவித்து வைக்கப்பட்டிருந்த வலைகளில் பற்றி, படகு முழுதும் பரவியது. தீயை அணைக்க முயன்று முடியாததால் மீனவர்கள் கடலில் குதித்து தத்தளித்தனர். படகு தீப்பற்றி எரிவதை பார்த்த அருகே இருந்த மீனவர்கள், கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர்.
கடற்படையினர், மீனவர்களை பத்திரமாக மீட்டதுடன், படகில் பற்றிய தீயை அணைத்து கரைக்கு இழுத்து வந்தனர். இருப்பினும், படகின் உள்பகுதி எரிந்து சேதமானது.