சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 21 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பலாத்காரம் வாலிபருக்கு 21 ஆண்டு சிறை
ADDED : ஏப் 07, 2024 04:45 AM
மாண்டியா, : சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், ஒருவருக்கு 21 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, மாண்டியாவின் கூடுதல் மற்றும் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தமிழகத்தை சேர்ந்த வெங்கடேஷ், 30, பெங்களூரின் பீன்யா இரண்டாவது ஸ்டேஜில் வசிக்கிறார்.
இவர் 2020ல் பணி நிமித்தமாக பெங்களூரில் இருந்து மாண்டியாவுக்கு சென்றார். இதே பஸ்சில் 14 வயது சிறுமியும் பயணித்தார். இவர் மாண்டியா, கே.ஆர்.பேட்டின், கொடகஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்.
சிறுமியிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட வெங்கடேஷ், கவர்ச்சிகரமாக பேசி தன் வலையில் விழ வைத்தார். கே.ஆர்., பேட்டுக்கு பதிலாக, நாகமங்களாவில் சிறுமியை பஸ்சில் இருந்து இறக்கினார். அங்கிருந்து பஸ்சில் பெங்களூருக்கு வந்தனர். அதன்பின் தமிழகம், கோவையின், தனலட்சுமி நகருக்கு சிறுமியை அழைத்துச் சென்றார்.
வாடகை வீட்டில் சிறுமியை தங்க வைத்தார். 2020 ஆகஸ்ட் 21ல் சிறுமிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவரை, வெங்கடேஷ் பலாத்காரம் செய்தார்.
இதற்கிடையில் மகளை காணாமல், சிறுமியின் குடும்பத்தினர் தேடினர். அவர்களுக்கு சிறுமி நாகமங்களாவில் இறங்கியது தெரிந்தது.
நாகமங்களா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், தமிழகத்தில் வெங்கடேஷை கண்டுபிடித்து, கைது செய்தனர். சிறுமியை மீட்டனர்.
மாண்டியா நகரின் கூடுதல் மற்றும் விரைவு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் வெங்கடேஷின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 1.16 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நாகஜோதி, நேற்று தீர்ப்பளித்தார்.

