ADDED : மே 26, 2024 12:31 AM
ராஜ்கோட், குஜராத்தில், விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குழந்தைகள் உட்பட 25 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில், டி.ஆர்.பி., விளையாட்டு மையம் உள்ளது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கான விளையாட்டுகள் உள்ளன.
மேலும், உணவகமும் உள்ளது. கோடை விடுமுறையொட்டி, டி.ஆர்.பி., விளையாட்டு மையத்துக்கு நேற்று குழந்தைகள் உட்பட ஏராளமானோர் வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியதால், அப்பகுதி முழுதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், குழந்தைகள் உட்பட 25 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இது குறித்து, ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் ராஜு பார்கவா கூறியதாவது,
தற்போது தீ கட்டுக்குள் உள்ளது. இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு மையம், யுவராஜ் சிங் சோலங்கி என்பவருக்கு சொந்தமானது. மீட்புப் பணிகள் நிறைவடைந்த பின் விசாரணை நடக்கும். தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.