ADDED : ஆக 27, 2024 05:00 AM
துமகூரு : செய்த பணிகளுக்கு பில் தொகை வழங்க, லஞ்சம் வாங்கிய மூன்று பொறியாளர்கள், லோக் ஆயுக்தாவிடம் சிக்கினர்.
துமகூரு, சிக்கநாயகனஹள்ளி கிராமிய குடிநீர் மற்றும் சுகாதார துணைப்பிரிவு சார்பில், சில பணிகள் ஒப்பந்ததாரர் சிக்கேகவுடாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் பணிகளை முடித்துவிட்டு, பில்களை சமர்ப்பித்து, தொகையை கோரினார்.
'பணிகளுக்கான மொத்த பில் தொகையில், 6.5 சதவீதம் லஞ்சமாக கொடுக்க வேண்டும்' என, கிராமிய குடிநீர் மற்றும் சுகாதார துணை பிரிவு உதவி செயல் நிர்வாக பொறியாளர் உமா மகேஷ், பொறியாளர் சசிகுமார், உதவி பொறியாளர் கிரண் நெருக்கடி கொடுத்தனர்.
இதுகுறித்து, ஒப்பந்ததாரர் சிக்கேகவுடா, லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார். நடவடிக்கை எடுத்த லோக் ஆயுக்தா போலீசார், நேற்று மதியம் சிக்கநாயகனஹள்ளி அலுவலகத்தில், மூன்று பொறியாளர்கள், சிக்கேகவுடாவிடம் லஞ்சம் வாங்கியபோது, திடீர் சோதனை நடத்தி, கையும், களவுமாக பிடித்தனர். மூவரிடமும் விசாரணை தொடர்கிறது.
செய்த பணிகளுக்கு பில் தொகை வழங்க, லஞ்சம் வாங்கிய மூன்று பொறியாளர்கள், லோக் ஆயுக்தாவிடம் சிக்கினர்.

