3.5 சதவீதம் லஞ்சம் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றச்சாட்டு
3.5 சதவீதம் லஞ்சம் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றச்சாட்டு
ADDED : மே 06, 2024 05:18 AM
பெங்களூரு, :பாக்கி பில் தொகை வழங்குவதற்கு அதிகாரிகள் 3.5 சதவீதம் லஞ்சம் கேட்பதாக, பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் மஞ்சுநாத் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பூங்கா, சாலை மேம்பாடு; கால்வாய், இந்திரா உணவகங்கள், பொது கழிப்பிடங்கள் நிர்வகிப்பு உட்பட வெவ்வேறு பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு, 2022 ஏப்ரல் முதல் பில் தொகை வழங்கப்படவில்லை.
மாநகராட்சி நிதியின் கீழ் பணிகள் முடிந்த நிலையில், பாக்கி பில் தொகை வழங்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் வேண்டும் என்றே தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, பெங்., மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் மஞ்சுநாத், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
பாக்கி பில் தொகை வழங்கும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினால், பணிகளை ஆய்வு செய்ய வேண்டும், பணிகளின் தரம் குறித்த அறிக்கை சமர்பிக்கும்படி பொறியாளர்கள் தகராறு செய்கின்றனர்.
இந்த அறிக்கை தயாரிக்க, ஒரு மாதம் ஆகும். ஆனால், லஞ்சம் கொடுத்தால், எந்த அறிக்கையும் இல்லாமல், பாக்கி பணத்தை வழங்குவார்கள். இது குறித்து, தலைமை பொறியாளரை கேட்டால், தலைமை கமிஷனரை கேட்கும்படி சொல்கிறார்.
அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்புக்கு கிடைக்கவில்லை. நேரிலும் கிடைக்கவில்லை. எனவே 'எக்ஸ்' வலை தளம் வாயிலாக, அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக, தலைமை கமிஷனரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
இதற்கு முன், மாநகராட்சியிடம் பணம் இல்லை என்று சொன்னார்கள். இப்போது பணம் இருந்தும், பில் தொகை வழங்க 3.5 சதவீதம் லஞ்சம் கேட்கின்றனர். லஞ்சம் தரவில்லை என்றால், பில் தொகை வழங்க மாட்டார்கள்.
இதற்கு முன், தலைமை அலுவலகத்தில் இருந்து அனைத்து பில் தொகையும் வழங்கப்பட்டது. தற்போது, அந்தந்த மண்டல கமிஷனர்கள் மூலமே வழங்கப்படுகிறது. இங்கு, டேபிள்களின் எண்ணிக்கை அதிகம். அனைவருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.