ADDED : மே 29, 2024 05:45 AM

பீதர், : சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கில், காரஞ்சா திட்டத்தின் உதவி பொறியாளருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை, 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, பீதர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பீதரின், குருநகர் காலனியில் வசிப்பவர் பிரோஜுதீன். இவர் 1982ல் உதவி பொறியாளராக, அரசு பணியில் சேர்ந்தார். வெவ்வேறு துறைகளில் பணியாற்றினார். 2008ல் காரஞ்சா கால்வாய் திட்டத்தின் உதவி பொறியாளராக பணியாற்றினார்.
அப்போது, இவர் வருவாய்க்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக, லோக் ஆயுக்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், 2008 பிப்ரவரி 6ல் இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர். பெருமளவில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.
பிரோஜுதீன் அரசு பணிக்கு சேர்ந்த 1982 முதல் 2008 வரை அவரது அசையும், அசையா சொத்துகளை ஆய்வு செய்தபோது, வருவாய்க்கும் அதிகமாக பல மடங்கு சொத்து குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் மீது வழக்குப் பதிவு செய்த லோக் ஆயுக்தா போலீசார், விசாரணையை முடித்து பீதர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் பிரோஜுதீன், வருவாயை விட 20 சதவீதம் சொத்து குவித்தது உறுதியானது. எனவே, இவருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை, 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.