ADDED : ஜூலை 24, 2024 05:28 AM
பெங்களூரு : பெங்களூரில் மாநகராட்சியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட 8,362 பேனர்கள் அகற்றப்பட்டன. இது தொடர்பாக 142 வழக்குகள் பதிவாகியுள்ளன.
பெங்களூரில் மாநகராட்சியின் அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக வைக்கப்படும் பேனர்கள், கட்- - அவுட்டுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
சட்ட விரோத பேனர்கள், கட் - -அவுட்டுகள் தொடர்பாக, கர்நாடகா அரசை, உயர் நீதிமன்றமும் பலமுறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன் பின்னர் நகரில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் மும்முரமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த ஜூன் 1 ம் தேதி முதல் இதுவரை 8,362 பேனர்கள், கட் -- அவுட்டுகள் அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் 167 புகார்கள் பதிவு செய்யப்பட்டு 142 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக பேனர்கள் வைத்தவர்களிடமிருந்து 1.30 லட்சம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பேனர்கள் குறித்து 1533 அல்லது 94806 83939 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சிகூறியுள்ளது.

