ADDED : மே 22, 2024 06:45 AM

ராய்ச்சூர்: கழுத்தில் தெருநாய் கடித்து குதறியதில், பலத்த காயம் அடைந்த, 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
ராய்ச்சூர் அருகே கோரவிஹால் கிராமத்தில், கடந்த சில தினங்களாக, தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது.
சாலையில் நடந்து செல்வோரை விரட்டி சென்று கடிக்கின்றன. தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு, கிராம மக்கள் கோரிக்கை வைத்தும், எந்த பயனும் இல்லை.
இந்நிலையில் கடந்த 7 ம் தேதி தெருவில் நின்று, விளையாடிய ஏழு குழந்தைகளை, ஒரு தெருநாய் விரட்டி சென்று கடித்தது; ஏழு குழந்தைகளும் காயம் அடைந்தனர்.
கீரலிங்கம் என்பவரின் மகள் லாவண்யா, 4 கழுத்தில், தெருநாய் கடித்து குதறியது. ராய்ச்சூர் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று முன்தினம் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.
ஆனால் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில், லாவண்யாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
அதிகாரிகள் அலட்சியத்தால் மகளை பறிகொடுத்து விட்டதாக, லாவண்யாவின் பெற்றோர் கதறி அழுதனர். இனியாவது தெருநாய்களை பிடிப்பரா என்று, கோரவிஹால் மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

