ADDED : ஆக 15, 2024 08:00 PM
நங்லோய்: மேற்கு டில்லியின் புறநகர் பகுதியில் உள்ள சாத் காட் குளத்தில் மூழ்கி ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்தான்.
பப்ரோலா மாநகராட்சிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது சிறுவன் 11ம் தேதி மாயமானதாக ரன்ஹோலா போலீசில் புகார் செய்யப்பட்டது. அவனது பெற்றோர் பல இடங்களில் தேடினர்.
சிறுவனின் வீடு இருந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் தன் நண்பனுடன் சிறுவன் செல்வது தெரிய வந்தது. மழை வெள்ளம் நிரம்பிய சாத்காட் குளம் இருக்கும் பகுதியை நோக்கி அவர்கள் செல்வதை போலீசார் உறுதி செய்தனர்.
சிறிது நேரத்தில் சிறுவனின் நண்பன் மட்டும் திரும்பி வருவதும் தெரிய வந்தது. மறுநாள் காலையில் சாத் காட் குளத்தில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது.