ADDED : மே 28, 2024 06:28 AM

ராய்ச்சூர்: வறட்சி காலத்திலும், ஒரு விவசாயி மாம்பழங்களை விளைவித்துள்ளார். இரண்டே மாதங்களில், 'ஆன்லைன்' வழியாக 1,800 கிலோ மாம்பழங்களை விற்பனை செய்துள்ளார்.
ராய்ச்சூரின் மண்டலகேரா கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆஞ்சனேயா, 40; டிப்ளமோ படித்த இவர், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றினார்.
குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பு இவருக்கு இருந்ததால் வேலையை விட்டு விட்டு, சொந்த ஊருக்கு சென்று விவசாயியாக மாறினார். தன் சொந்த நிலத்தில் பயிரிட துவங்கினார்.
சாத்துக்குடி, எலுமிச்சை பயிரிட்டு விற்பனை செய்த இவர், தற்போது பல விதமான மாம்பழங்களை விளைவித்துள்ளார். மாம்பழ விவசாயிகளின் வசதிக்காக, மாம்பழ வளர்ச்சி மற்றும் மார்க்கெட் கார்ப்பரேஷன் 'கர்சிரி மாங்கோஸ்' என்ற ஆன்லைன் விற்பனை செயலியை அறிமுகம் செய்தது.
இதன் வழியாக ஆஞ்சனேயா, மாம்பழங்களை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு சேர்க்கிறார்.
பெங்களூரின் லால்பாக் பூங்கா, ஜெயநகர், ஒயிட் பீல்டில் நடந்த மாம்பழ மேளாக்களுக்கும், மாம்பழங்களை அனுப்பி வைத்தார். இரண்டு மாதங்களில் ஆன்லைன் வழியாக, 1,800 கிலோ மாம்பழங்களை விற்பனை செய்துள்ளார். இவரை பார்த்து மற்ற விவசாயிகளும், ஆன்லைன் வழியாக மாம்பழங்களை விற்கின்றனர்.