ADDED : ஏப் 30, 2024 01:34 AM
லக்னோ, பெண்களுக்கு அதிகாரம், இடஒதுக்கீடு பேசும் நிலையில், ஆண்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக, ஒரு கட்சி தேர்தலில் போட்டியிட்டு வருகிறது.
உத்தர பிரதேசத்தில் இருந்து செயல்பட்டு வரும் 'மர்த் எனப்படும், 'மேரா அதிகார் ராஷ்ட்ரிய தளம்' கட்சி, ஆண்களின் நலனுக்காக போராடி வருகிறது.
ஆண்கள் என்று பொருள்படும் மர்த் என்ற பெயர் கட்சிக்கு வரும்படி, அதற்கு பெயர் வைத்துள்ளனர். என் அதிகாரம் என்பதை குறிக்கும் வகையில், கட்சிக்கு, மேரா அதிகார் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த கட்சி, வரும் லோக்சபா தேர்தலில் லக்னோ, ராஞ்சி, கோரக்பூர் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
மேலும், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. ஆண் குழந்தைகளின் கவுரவத்தை பாதுகாப்போம் என்ற கோஷத்துடன் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த, 2018ல் துவக்கப்பட்ட இந்த கட்சியின் முக்கிய நோக்கம், ஆண்களின் உரிமைகளை மீட்டுத் தருவதாகும். இதுவரை, லோக்சபா, சட்டசபை என, எட்டு தேர்தல்களில் இந்தக் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர்.
இது குறித்து, கட்சியின் தேசிய பொதுச் செயலர் அசுதோஷ் குமார் பாண்டே கூறியுள்ளதாவது:
கடந்த தேர்தல்களைப் போலவே, இந்தத் தேர்தலிலும் எங்களுடைய வேட்பாளர்கள் டிபாசிட் இழப்பர். நாங்கள் நன்கொடைகள் வாங்குவதில்லை. வேட்பாளர்கள் அவர்களுடைய சொந்த செலவிலேயே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்காக நாங்கள் போட்டியிடவில்லை. ஆண்களின் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கவே போட்டியிடு கிறோம்.
பெண்களுக்கான உரிமை, பாதுகாப்பு என்ற பெயரில் ஆண்கள் நசுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும், 200 ஆண்கள், பல்வேறு குடும்ப பிரச்னைகளால் தற்கொலை செய்கின்றனர். அவர்களுடைய பிரச்னைகளை யாரும் காது கொடுத்து கேட்பது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

