
பெங்களூரு: ஷிவமொகா லோக்சபா தொகுதியில், ஈஸ்வரப்பா வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பே, அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க, பா.ஜ., மேலிடம் தயாராகிறது. கட்சியில் இருந்து அவருக்கு, 'கல்தா' கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தலில், ஷிவமொகா தொகுதியில் பா.ஜ., சீட் எதிர்பார்த்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஏமாற்றமடைந்தார். அதன்பின் லோக்சபா தேர்தல் மீது அவர் கண் பதிந்தது.
சவால்
தன் மகன் காந்தேஷுக்கு, ஹாவேரி தொகுதியில் சீட் எதிர்பார்த்தார். காந்தேஷும் போட்டியிட ஆர்வமாக இருந்தார். ஆறேழு மாதங்களாகவே, ஹாவேரி தொகுதியில் வலம் வந்து, மக்களின் நம்பிக்கையை பெற முயற்சித்தார். தனக்கே சீட் கிடைக்கும் என, நம்பினார்.
ஈஸ்வரப்பாவும் இம்முறை தன் மகனுக்கு வாய்ப்பளிக்கும்படி, மேலிடத்திடம் மன்றாடினார். பல முறை டில்லிக்கு சென்று வந்தார்.
ஆனால் ஹாவேரி தொகுதியில், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை, பா.ஜ., வேட்பாளராக்கியது. வெகுண்டெழுந்த ஈஸ்வரப்பா, தன் மகனுக்கு சீட் கிடைக்காததற்கு எடியூரப்பாவும், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவும் காரணம் என, குற்றம் சாட்டினார்.
ராகவேந்திரா போட்டியிடும் ஷிவமொகா தொகுதியில், சுயேச்சையாக போட்டியிடுவதாக சவால் விடுத்தார். ஷிவமொகாவில் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார். மடாதிபதிகளை சந்தித்து ஆதரவு கேட்கிறார்.
ஷிவமொகாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்து, பொது கூட்டத்தில் பங்கேற்றார். இதில் ஈஸ்வரப்பா பங்கேற்கவில்லை. சமீபத்தில், ராம்நகருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். அப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈஸ்வரப்பாவை அழைத்தார். இதை அவர் நிராகரித்தார்.
அதன்பின் டில்லிக்கு வந்து தன்னை சந்திக்கும்படி, அமித் ஷா கூறியிருந்தார். இதன்படி ஈஸ்வரப்பா டில்லிக்கு சென்றும் இவரை அமித் ஷா சந்திக்கவில்லை. இது, ஈஸ்வரப்பாவின் கோபத்தை அதிகமாக்கியது.
'பிரம்மனே உத்தரவிட்டாலும், சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் என் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன்' என, திட்டவட்டமாக கூறினார்.
வேட்பு மனு தாக்கல் செய்யவும் தயாராகி வருகிறார். ஷிவமொகாவில் தனி அலுவலகமும் திறந்துள்ளார். இவரது செயல் பா.ஜ., மேலிடத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்வரப்பா மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.
இவரை கட்சியில் இருந்து நீக்குவதன் மூலம், கட்சிக்கு எதிராக செயல்பட்டால் கட்சி சகித்து கொள்ளாது என, அதிருப்தியாளர்களை எச்சரிக்க, பா.ஜ., மேலிடம் தயாராகி வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் கட்சிக்கு எதிராக செயல்பட்ட, முக்கிய தலைவர்கள் கல்யாண் சிங், உமா பாரதி, சங்கர் சிங் வகேலா மீது, பா.ஜ., ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
அதேபோன்று தற்போது ஈஸ்வரப்பா மீதும், நடவடிக்கை எடுக்க தயாராகிறது. இதே காரணத்தால் தான், இவரை அமித் ஷா டில்லியில் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே, இவரை கட்சியில் இருந்து நீக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, ஈஸ்வரப்பா கூறியதாவது:
தங்களுடன் வரும்படி, விஜயேந்திரா கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும்படி, இவரது அண்ணனிடம் கூறட்டும். மாநில பா.ஜ., தலைவர் பதவியை, விஜயேந்திரா ராஜினாமா செய்யட்டும். அதன்பின் நான் போட்டியில் இருந்து விலகுகிறேன்.
3 லட்சம் ஓட்டு
மத்திய தலைவர்கள் ஈஸ்வரப்பாவுடன் பேசுவர் என கூறுவதற்கு விஜயேந்திராவுக்கு அதிகாரம் கொடுத்தது யார். கட்சியின் அனைத்து அதிகாரமும், எடியூரப்பா மற்றும் மகன்களின் கையிலேயே இருக்க வேண்டுமா.
இவரது குடும்பத்தின் ஒருவருக்கு மாநில தலைவர் பதவியை கொடுக்க, ஆறு மாதம் வரை அந்த பதவியை காலியாக வைத்திருந்தனர்.
என்னை போட்டியிடாதீர்கள் என, கூறுவதற்கு முன், தன் சகோதரனை போட்டியிட வேண்டாம் என, கூறட்டும். நான் இப்போதும் பா.ஜ., தொண்டன் தான். தேர்தலில் போட்டியிட வேண்டும் என, விரும்புகிறேன்.
நான் போட்டியிட்டால், பா.ஜ.,வால் என்ன செய்ய முடியும். என்னை கட்சியில் இருந்து நீக்கலாம். இதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.
நான் சுயேச்சையாக போட்டியிடுவது உறுதி. 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், நான் வெற்றி பெறுவேன். என்னை கட்சியில் இருந்து நீக்கினாலும், நான் வெற்றி பெற்ற பின் மீண்டும் பா.ஜ.,வில் சேர்ந்து கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

