ADDED : ஏப் 29, 2024 05:54 AM
மங்களூரு : தட்சிண கன்னடா, உப்பினங்கடியில் வசிக்கும் சிவபிரசாத் என்பவருக்கு, ஏப்ரல் 18ல் திருமணம் நடந்தது. மார்ச் 1ல் திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டிருந்தது. இதில், 'இம்முறையும் நரேந்திர மோடியை பிரதமராக்குவதே, மணமக்களுக்கு நீங்கள் கொடுக்கும் திருமணப் பரிசு' என, அச்சிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து, தகவலறிந்த தேர்தல் அதிகாரிகள், ஏப்ரல் 14ல் சிவபிரசாத் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், 'நாங்கள் தேர்தல் விதிகளை மீறவில்லை. மோடி மீதான அன்பு, நாட்டின் மீதுள்ள அக்கறையால், இதுபோன்று அச்சிட்டோம்' என எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளித்தார்.
முதற்கட்ட ஓட்டுப்பதிவு முடிந்தபின், தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின்படி, சிவபிரசாத் மீது உப்பினங்கடி போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம், திருமண அழைப்பிதழ் அச்சிட்ட அச்சகத்தினரை வரவழைத்து, விசாரித்தனர்.

