பா.ஜ., - ம.ஜ.த.,வை கண்டித்து அஹிந்தா அமைப்பு போராட்டம்
பா.ஜ., - ம.ஜ.த.,வை கண்டித்து அஹிந்தா அமைப்பு போராட்டம்
ADDED : ஆக 05, 2024 09:46 PM

ஷிவமொகா : 'மூடா' முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவை தொடர்புபடுத்தி, அவரை ராஜினாமா செய்ய கூறும் பா.ஜ., - ம.ஜ.த.,வினரை கண்டித்து, அஹிந்தா அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
மூடா முறைகேட்டில், விளக்கம் கேட்டு, கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். முதல்வர் ராஜினாமா செய்ய கூறி, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பாதயாத்திரை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மூடா முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவை தொடர்புபடுத்தி, அவரை ராஜினாமா செய்ய கூறும் பா.ஜ., - ம.ஜ.த.,வினரை கண்டித்து, அஹிந்தா அமைப்பினர், நேற்று நகரின் சிவப்பா நாயக் சதுக்கத்தில் போராட்டம் நடத்தினர். அத்துடன், டயர்களை தீ வைத்து எரித்தனர்.
அப்போது அமைப்பினர் கூறியதாவது:
முதல்வர் சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையில், எந்த ஊழலும் செய்யாமல், மக்கள் நல பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவரின் நற்பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன.
எடியூரப்பாவும், அவரது மகன்களும், 'பினாமி' பெயரில் ஷிவமொகாவில் ஆயிரக்கணக்கான நிலங்களை வாங்கி உள்ளனர். நல்லாட்சி வழங்கும் சித்தராமையாவுக்கு தொந்தரவு கொடுத்தால், மாநிலம் முழுதும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் போராட்டம் நடத்துவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., - ம.ஜ.த.,வை கண்டித்து சாலையில் டயர்களை எரித்து, அஹிந்தா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இடம்: ஷிவமொகா.