அரசியல் சாசனத்தில் எல்லாரும் ஒன்றுதான் மைசூரு பா.ஜ., வேட்பாளர் யதுவீர் பேட்டி
அரசியல் சாசனத்தில் எல்லாரும் ஒன்றுதான் மைசூரு பா.ஜ., வேட்பாளர் யதுவீர் பேட்டி
ADDED : மார் 25, 2024 06:50 AM
மைசூரு: ''சமுதாயத்தை ஒன்றிணைத்தால் நாட்டுக்கு நல்லது. மன்னரும், சாமானியர்களும் ஒன்று தான்,'' என மைசூரு பா.ஜ., - வேட்பாளர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜா உடையார் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சமுதாயத்தை ஒன்றிணைத்து, நாட்டின் நலனுக்காக பாடுபடுவோம். அனைத்து தரப்பினரும் எங்களுக்கு ஒத்துழைப்பு தருகின்றனர். அடுத்த கட்ட பிரசாரத்தில் எங்களுடன் ம.ஜ.த.,வினரும் இணைவர். தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் கட்சியே தீர்மானிக்கும்.
அடிமட்டத்தில் இறங்கி பிரசாரம் செய்வதால், சாமானியர்களின் கஷ்டங்களை அருகில் இருந்து பார்ப்பது போன்று உள்ளது. மக்கள் படும் இன்னல்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஹூன்சூர், பிரியபட்டணா, குடகு வனப்பகுதிகளில் மனித - விலங்கு மோதல் அதிகரித்துள்ளதை அறிந்து கொண்டேன்.
அரசியல் சாசனத்தில் மன்னர்களும், சாமானியர்களும் ஒன்று தான். சட்டத்தில் அனைவருக்கும் உரிமை உண்டு. நல்ல பணி செய்யவே அரசியலுக்கு வந்தேன்.
தேர்தலை முன்னிட்டு குவெம்பு நகரில் பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலிட தேர்தல் பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால் கூறியதாவது:
மைசூரு மன்னர்கள், மக்களுக்கு நிறைய பங்களித்து உள்ளனர். அவரது தொலைநோக்கு பார்வையால், இப்பகுதியில் ஏராளமான வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான், தற்போதைய எம்.பி., பிரதாப் சிம்ஹாவை விட சிறந்த வேட்பாளராக யதுவீருக்கு சீட் கொடுக்கப்பட்டு உள்ளது.
எங்கள் வேட்பாளர் சாதாரண மனிதர். அவர் மக்களுடன் இருக்கிறார். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிராக, எங்கள் வேட்பாளர் போராடுகிறார். சீட் கிடைக்காததால் கோபத்தில் உள்ள மூத்த தலைவர்களை சமாதானப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அனைத்தும் சரியாகிவிடும்.
எம்.பி., சுமலதாவுடன் பிரதமர் மோடி, நட்டா, அமித் ஷா ஆகியோர் பேசி உள்ளனர். கட்சியில் அவருக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளாக எங்களுடன் இருந்தார். வரும் நாட்களிலும் அவர் எங்களுடன் இருப்பார்.
இவ்வாறு அவர்கூறினார்.

