ADDED : மார் 22, 2024 01:32 AM

வங்கியில் உள்ள பணத்தை தேர்தலுக்கு செலவிட முடியாமல் தடுத்து, காங்கிரஸ் கட்சியை பொருளாதார ரீதியாக முடக்க பிரதமர் முயற்சி செய்வதாக, கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.
நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பெறப்பட்ட 20,000 ரூபாய்க்கு மேலான நன்கொடை விபரங்களை ஆண்டுதோறும் அறிவித்து வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்கின்றன.
வருமான வரி சட்டப்பிரிவு '13ஏ' கீழ் வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகின்றன.
கடந்த 2018- - 19ம் நிதிஆண்டுக்கான வருமான வரி கணக்கு விபரங்களை காங்கிரஸ் தாக்கல் செய்ய தவறியது. இதையடுத்து, அவர்கள் பெற வேண்டிய வருமான வரி விலக்கை இழந்தனர்.
இது தொடர்பாக, 2021ல் காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு அக்கட்சியிடம் இருந்து முறையான பதில் வராததை அடுத்து, அக்கட்சிக்கு சொந்தமான பல்வேறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
பிரச்னை
இவை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் தவறு என டில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, ஏப்., 1ல் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, தேர்தல் செலவுக்கு கூட பணமில்லை என, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, முதல்கட்ட ஓட்டுப்பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கிவிட்ட நிலையில், வங்கிக் கணக்குகளை அணுக முடியாமல் காங்., தலைமை தவித்து வருகிறது.
நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா, அக்கட்சியின் எம்.பி., ராகுல் உள்ளிட்டோர் செய்தியாளர்களை நேற்று கூட்டாக சந்தித்து முறையிட்டனர்.
அப்போது சோனியா பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது மிக மிக தீவிரமான பிரச்னை. இது, காங்.,கை மட்டும் பாதிக்கவில்லை; நம் ஜனநாயகத்தின் அடிப்படையையே அசைத்து பார்க்கிறது.
காங்.,கை பொருளாதார ரீதியாக முடக்க பிரதமர் மோடி திட்டமிட்டு முயற்சி செய்கிறார். பொது மக்களிடம் இருந்து நாங்கள் பெற்ற நன்கொடை பணம் முடக்கப்பட்டுஉள்ளது. எங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து வலுக்கட்டாயமாக பணம் எடுக்கப்பட்டுள்ளது.
சவாலான இந்த தருணத்திலும், லோக்சபா தேர்தல் பிரசாரம் முடங்கி விடாமல் இருக்க, எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம்.
தேர்தல் பத்திர விற்பனையால் பா.ஜ., மிகப் பெரிய அளவில் பலன் அடைந்துள்ளது. அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான எங்கள் நிதி, வேண்டுமென்றே முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்., - எம்.பி., ராகுல் கூறியதாவது:
பிரதமரும், உள்துறை அமைச்சரும் சேர்ந்து எங்கள் வங்கிக் கணக்குகளை முடக்கி உள்ளது கிரிமினல் செயல்பாடு. எங்களால் தேர்தல் பிரசாரம் செய்ய முடியவில்லை. நாட்டில் ஜனநாயகம் என்பது இல்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என இந்தியாவை குறிப்பிடுவது பொய். நாட்டின் ஜனநாயக கட்ட மைப்பை காப்பாற்ற வேண்டிய அமைப்புகள் இருந்தும் எதுவும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்., தலைவர் கார்கே பேசுகையில், ''லோக்சபா தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டுமெனில், எங்கள் வங்கிக் கணக்குகளை நாங்கள் அணுக, அரசியலமைப்பு நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்.
ஏகபோக உரிமை
''அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியலமைப்பு நிறுவனங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டுப்படுத்தக் கூடாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் வளங்களின் மீது ஏகபோக உரிமை வைத்திருக்கக் கூடாது,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -

