ரேணுகாசாமியை 5 மணி நேரம் தொடர்ந்து தாக்கியது அம்பலம்
ரேணுகாசாமியை 5 மணி நேரம் தொடர்ந்து தாக்கியது அம்பலம்
ADDED : ஜூலை 20, 2024 06:29 AM

பெங்களூரு: ரேணுகாசாமி மீது, 5 மணி நேரம் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. இவரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரேணுகாசாமியின் பிரேத பரிசோதனை அறிக்கை, கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ச்சியும், மர்ம உறுப்பில் கொடூரமாக தாக்கியும் கொலை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில், ரேணுகா சாமியை கொலையாளிகள் 5 மணி நேரம் தொடர்ந்து தாக்கியதும், இதனால் உடலில் பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
ரேணுகாசாமியின் உடல், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர், பவித்ரா தோழியின் கணவர் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் உடலை பிரேத பரிசோதனை செய்யவில்லை என்பது தற்போது தெரிந்துள்ளது.
ரேணுகாசாமியை கொலை செய்த பின், வழக்கிலிருந்து தப்பிக்க முயற்சி செய்த தர்ஷன், நண்பர்களான மோகன்ராஜ், பிரகாஷ் ஆகியோரிடம், 83 லட்சம் ரூபாய் வாங்கியது தற்போது தெரிந்துள்ளது.