ஒரே தொகுதியில் ஒரே நாளில் அமித் ஷா, பிரியங்கா பிரசாரம்
ஒரே தொகுதியில் ஒரே நாளில் அமித் ஷா, பிரியங்கா பிரசாரம்
ADDED : ஏப் 24, 2024 07:23 AM

பெங்களூரு: பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதியில், பா.ஜ.,வின் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 'ரோடு ஷோ' நடத்தினார். மறுபக்கம் அதே தொகுதியில், காங்கிரசின் சவும்யாரெட்டிக்கு ஆதரவாக, அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் பிரியங்கா பிரசாரம் மேற்கொண்டார்.
மாநிலத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தொகுதிகளில், பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதியும் ஒன்று. ஏனென்றால் இங்கு பா.ஜ., சார்பில், அக்கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா; காங்கிரஸ் சார்பில், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டியின் மகள் சவும்யாரெட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேஜஸ்வி சூர்யா, 2019ல் முதன் முறையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். அப்போது, அவருக்கு ஆதரவாக ஜெயநகரில் பா.ஜ., மூத்த தலைவர் அமித் ஷா, 'ரோடு ஷோ' நடத்தினார்.
இம்முறை அமித் ஷா நேற்று அவருக்கு ஆதரவாக, பொம்மனஹள்ளியில் 'ரோடு ஷோ' நடத்தி ஓட்டு சேகரித்தார். விவேகானந்தர் சிலைக்கு மலர் துாவி, துவங்கிய 'ரோடு ஷோ', முக்கிய சாலைகளின் வழியே சென்றது.
சாலையில் புறங்களிலும் ஏராளமான பா.ஜ., தொண்டர்கள், ஆதரவாளர்கள் குவிந்து, அமித் ஷாவை பார்த்து, உற்சாகம் அடைந்தனர். வழிநெடுகிலும், அவர் மீது தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம் செய்தனர். கதாயுதம் பரிசாக தந்தனர்.
தொண்டர்களை பார்த்து கை அசைத்து, அவர்கள் மீது அமித் ஷாவும் மலர் துாவினார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், எம்.எல்.ஏ.,க்கள் சதீஷ்ரெட்டி, ரவிசுப்பிரமணியா, ராமமூர்த்தி உடனிருந்தனர்.
* கொள்ளைக்கார கட்சி
அப்போது அமித் ஷா பேசியதாவது:
கர்நாடகாவில் கொள்ளைக்கார ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சியால் மக்கள் அவதிப்படுகின்றனர். சட்டம் - ஒழுங்கு சரியில்லாமல், சமூக விரோதிகள் அதிகமாகி, பயங்கரவாத செயல்பாடுகளும் அதிகரித்துள்ளன.
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கும் எஸ்.டி.பி., கட்சியின் ஆதரவு காங்கிரசுக்கு உள்ளது. இது நாட்டு பாதுகாப்புக்கு அபாயமாகும். ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு, பெங்களூரு மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், முன்னேற்ற பாதையில் நாடு செல்கிறது. மத்திய அரசின் நடவடிக்கையால், நாட்டில் 75 சதவீதம் நக்சல் செயல்பாடு குறைந்துள்ளது. காங்கிரசின் வாக்குறுதிகள் எப்படிப்பட்டது என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமித் ஷா ஒரு பக்கம் 'ரோடு ஷோ' நடத்திக் கொண்டிருந்தால், மறுபக்கம் காங்கிரஸ் வேட்பாளர் சவும்யாவுக்கு ஆதரவாக, நகரின் எச்.எஸ்.ஆர்.லே அவுட்டில், காங்., தேசிய பொதுச்செயலர் பிரியங்கா, பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
துணை முதல்வர் சிவகுமார், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உட்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
* அடமானம்
அப்போது, பிரியங்கா பேசியதாவது:
காங்கிரஸ் கொள்ளைக்கார அரசு என்றும், பெண்களின் மாங்கலயத்தையும் பறித்து விடும் என, பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்.
நாட்டில், 55 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. பெண்களின் மாங்கலயத்தை யாராவது பறித்துச் சென்றார்களா? சுதந்திரத்தின்போது, நாட்டுக்காக எனது பாட்டி இந்திரா, தனது நகைகளை அடமானம் வைத்து பணம் வழங்கினார்.
இத்தகைய கட்சியை, கொள்ளைக்கார கட்சி என்பதா? மோடிக்கு மாங்கலயத்தின் மகத்துவம் தெரியவில்லை. வெறும் உணர்வுப்பூர்வமான விஷயங்களை கூறி வருகிறார்.
கொரோனா நேரத்தில் ஊரடங்கு பிறப்பித்ததால், பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். டில்லியில் போராட்டம் நடத்திய, 609 விவசாயிகள் உயிரிழந்தனர். ஆனால், காங்கிரஸ் மீது பொய்களை பரப்பி வருகிறார்.
பொய் பரப்பும் பா.ஜ., ஆட்சி வேண்டுமா? மக்கள் கஷ்டத்தை புரிந்து கொண்டு, திட்டங்களை அமல்படுத்தும் காங்கிரஸ் ஆட்சி வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

