ADDED : ஏப் 27, 2024 06:07 AM
பெங்களூரு: வெளி மாநிலத்தைச் சேர்ந்த, வாய் பேச முடியாத பெண் ஒருவர், பிழைப்பு தேடி பெங்களூருக்கு வந்தார். தன்னுடன் எட்டு வயது மகளை அழைத்து வந்திருந்தார். மல்லேஸ்வரம் மெக்ரத் சாலையில் உள்ள பிரபலமான மால் அருகில் பலுான் விற்பனை செய்தார்.
இப்பகுதியில் சாலையில் பணிகள் நடப்பதால், மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. இப்பகுதி யில் பிரதான சாலையில் 'ஹிட்டாச்சி' வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு, மகளை, இங்கு அமர்த்திவிட்டு தாய் எங்கோ சென்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த 54 வயது நபர் ஒருவர், சிறுமிக்கு பானிபூரி வாங்கி தருவதாகக் கூறி,  வாகனத்தின் கீழ்ப்பகுதிக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினார். தாய் வந்து பார்த்த போது, மகளுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு அழுவதைக் கண்டு, உதவி கேட்டு கூச்சலிட்டார்.
தாய்க்கு பேச்சு வராததால், உதவிக்கு வந்தவர்களிடம் நடந்ததைக் கூற முடியவில்லை. அப்போது அங்கு வந்த ரோந்து போலீசாரிடம், சைகை மூலமாக நடந்ததை விவரித்தார். சிறுமியை போலீசார் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
'போக்சோ' சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து அந்நபரை தேடுகின்றனர்.

