ஏ.ஐ., வருகையால் இந்திய ஐ.டி., துறையில் சிக்கல் உருவாகும்: எச்சரிக்கிறார் ராகுல்
ஏ.ஐ., வருகையால் இந்திய ஐ.டி., துறையில் சிக்கல் உருவாகும்: எச்சரிக்கிறார் ராகுல்
UPDATED : செப் 09, 2024 11:03 AM
ADDED : செப் 09, 2024 08:08 AM

வாஷிங்டன்: 'ஏ.ஐ, காரணமாக இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி) மிகப்பெரிய சிக்கலை சந்திக்கப் போகிறது' என லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் தெரிவித்தார்.
அமெரிக்காவில், டெக்சாஸில் நடந்த நிகழ்ச்சியில், ராகுல் பேசியதாவது: இந்தியாவுக்கு திறமையில் சிக்கல் இருப்பதாக பலர் கூறுகின்றனர். திறமைகளை மதிப்பதில் தான் இந்தியாவுக்கு சிக்கல் இருப்பதாக நான் நினைக்கிறேன். திறன்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக நான் நம்பவில்லை. கல்விமுறை இந்தியாவின் திறன் கட்டமைப்போடு எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை. தற்போதுள்ள கல்விமுறையின் மிகப்பெரிய பிரச்னை கருத்தியல் தான். பாரத் ஜோடோ யாத்திரை அரசியலில் அன்பை அறிமுகப்படுத்தியது.
அரசியலில் அன்பு
அரசியலை பார்க்கும் விதம், மக்களைப் பார்க்கும் விதத்தை பாரத் ஜோடோ யாத்திரை மாற்றியது. அரசியல் நிகழ்வுகளில் வெறுப்பு, கோபம், ஊழல் போன்ற வார்த்தைகளை காணலாம். யாத்திரை இந்திய அரசியலில் அன்பை அறிமுகப்படுத்தியது.
பேசுவதை விட கேட்பது மிகவும் முக்கியானது. மக்களை புரிந்து கொள்வதற்கும் கேட்பது அடிப்படை. இந்தியா என்பது ஒரே கருத்து என ஆர்.எஸ்.எஸ்., நம்புகிறது. இந்தியா என்பது பல கருத்துகள் கொண்டது. ஜாதி, மத பேதமின்றி அனைவரும் கனவு காண, அனைத்திலும் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பு சட்டம்
நவீன இந்தியாவின் அடித்தளம் அரசியலமைப்பு சட்டம் என்பதை தேர்தலில் மக்கள் புரிந்து கொண்டனர். அரசியலமைப்பு சட்டம், மதங்கள் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மேற்கு நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்னை உள்ளது. உற்பத்தி துறையில் வளர்ச்சியை உருவாக்க இந்தியா சிந்திக்க வேண்டும். இல்லையென்றால், அதிக அளவு வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்க நேரிடும். இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்னை உள்ளது. இந்த பிரச்னை சீனாவில் இல்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.