ADDED : மார் 26, 2024 06:37 AM

'நுணலும் தன் வாயால் கெடும்' என்ற பழமொழிக்கு உத்தர கன்னடா பா.ஜ., - எம்.பி., அனந்த் குமார் ஹெக்டே சரியான உதாரணம். சர்ச்சையான கருத்துகளை கூறி, கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதே இவரின் வேலையாக இருந்ததால், அவருக்கு இம்முறை சீட் மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்தியில் 400 உறுப்பினர்களுடன் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ., தேர்தல் பணியாற்றி வருகிறது.
அதே வேளையில் கட்சிக்கு விரோதமாகவும், ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்த எம்.பி.,க்களுக்கு இம்முறை சீட் வழங்கக்கூடாது என்று முடிவெடுத்த பா.ஜ., அதுபோன்று செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பா.ஜ., - எம்.பி.,க்களாக உள்ள சிலருக்கு சீட் மறுத்தது.
அதுபோன்று கர்நாடகாவில் உத்தர கன்னடா எம்.பி.,யான அனந்த் குமார் ஹெக்டே, 2017 - 19 வரை மத்திய அமைச்சராக இருந்தார். அதன்பின், 2019ல் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்ததால், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
இதனால் கட்சியின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் கூட, பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் கூட செய்ய வரவில்லை. இதனால் கட்சித் தலைமை அவர் மீது அதிருப்தியில் இருந்தது. மாவட்ட தொண்டர்களும் கோபத்தில் இருந்தனர்.
திடீரென கடந்தாண்டு பொது நிகழ்ச்சிகள், பா.ஜ., கூட்டங்களில் தலை காட்ட துவங்கினார். அப்போதும் வாயை மூடிக்கொண்டு இல்லாமல், 'நுணலும் தன் வாயால் கெடும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, 'மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பு சட்டம் மாற்றி அமைக்கப்படும்' என்றார்.
இது மாநிலம் முழுதும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. அத்துடன் 'இம்முறை அவருக்கு சீட் வழங்கக்கூடாது' என்று சொந்த கட்சியினரே கூறத் துவங்கினர்.
இத்தொகுதியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அனைத்து கட்சியினரிடமும் நல்ல மதிப்பை பெற்றுள்ள பா.ஜ., முன்னாள் சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரிக்கு 'சீட்' வழங்கப்பட்டுள்ளது
.
- நமது நிருபர் -

