மணிப்பூரில் 'பந்த்' வாபஸ்; 'கூகி' அமைப்பு அறிவிப்பு
மணிப்பூரில் 'பந்த்' வாபஸ்; 'கூகி' அமைப்பு அறிவிப்பு
ADDED : மார் 15, 2025 02:11 AM

இம்பால் : மணிப்பூரில் அறிவிக்கப்பட்டிருந்த காலவரையறையற்ற முழு அடைப்பை திரும்பப் பெறுவதாக, கூகி அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில், 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகளால் கலவரம் கட்டுக்குள் வந்த நிலையில், சமீபகாலமாக மீண்டும் வன்முறை வெடித்தது.
மணிப்பூர் சாலைகளில் அனைத்து மக்களும் சுதந்திரமாக செல்லும் வகையில், பாதுகாப்பு கெடுபிடிகள் குறைக்கப்பட்டு, அனைத்து சாலை தடுப்புகளையும் நீக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக முடங்கியிருந்த போக்குவரத்து சேவை கடந்த 8ம் தேதி துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாங்கள் வசிக்கும் பகுதியில் தங்களுக்கு தனி நிர்வாக வசதி வழங்க கோரியும் கூகி சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பஸ் உள்ளிட்ட அரசு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், கூகி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, கூகி சமூகத்தினர் அதிகம் வாழும் மாவட்டங்களில் காலவரையறையற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், முழு அடைப்பு போராட்டத்தை திரும்பப் பெறுவதாக கூகி - சோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
கூகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற முழு அடைப்பு, மார்ச் 13 இரவுடன் வாபஸ் பெறப்படுகிறது. தீவிர ஆலோசனைக்கு பின், இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இருப்பினும், மத்திய உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட முடிவுகளை, நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.
ஏனெனில், இது எங்கள் போராட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. எங்கள் கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்கிறது. கூகி - சோ மக்களுக்கு நிலையான நீதி கிடைக்கும் வரை எங்கள் எதிர்ப்பு தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.