இடிந்தது இன்னொரு பாலம்: 2 மாதத்தில் பீஹாரில் 15வது சம்பவம்
இடிந்தது இன்னொரு பாலம்: 2 மாதத்தில் பீஹாரில் 15வது சம்பவம்
ADDED : ஆக 17, 2024 11:29 AM

பாட்னா: பீஹாரில் கங்கை ஆற்றில் இன்று (ஆகஸ்ட் 17) பாலம் இடிந்து விழுந்தது. கடந்த 2 மாதத்தில் மொத்தம் 15 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளன.
பீஹார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து புதிய மற்றும் பழைய பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் நடைபெற்றன. பாலம் இடிந்து விழும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதையடுத்து பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
மக்கள் அதிர்ச்சி
இந்த நிலையில் இன்று மற்றொரு பாலமும் சேதமடைந்தது. கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒருபகுதி இன்று இடிந்து விழுந்தது. பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் பீஹாரில் இடிந்து விழும் 15வது பாலம் இதுவாகும். அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சஸ்பெண்ட்
ஏற்கனவே பாலம் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்பாக நீர்வளத்துறை மற்றும் ஊரக பணித்துறையை சேர்ந்த 16 இன்ஜினியர்களை மாநில அரசு சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தி வருகிறது.
முந்தைய சம்பவங்கள் வருமாறு
* ஜூன் 19ம் தேதியன்று அராரியா மாவட்டத்தின் பகாரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.
* ஜூன் 22ம் தேதியன்று சிவான் மாவட்டத்தில் காங்டாக் கால்வாய் குறுக்கே கட்ட பாலம் இடிந்து விழுந்தது.
* ஜூன்23ம் தேதியன்று கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம் இடிந்து விழுந்தது.
* ஜூன் 26ம் தேதி கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் கங்கை நதியை மஹாநந்தா நதியுடன் இணைக்கும் துணை நதியான மடியாவின் குறுக்கே, 70 மீட்டர் நீளத்துக்கு பாலம் இடிந்து விழுந்தது.
* ஜூன் 28ம் தேதி மதுபானி மாவட்டத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.
* ஜூலை 3ம் தேதி சரண் மாவட்டத்தில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்தன.
* ஜூலை 4ம் தேதி கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்தன.
* ஜூலை 10ம் தேதி சஹர்சா மாவட்டத்தில் உள்ள மஹிசி கிராமத்தில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது.
* ஆகஸ்ட் 9ம் தேதி கதிஹார் மாவட்டத்தில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.

