டெங்கு அதிகரிப்பதால் மெடிக்கல் எமர்ஜென்சி கர்நாடக அரசுக்கு பா.ஜ., - எம்.பி., வலியுறுத்தல்
டெங்கு அதிகரிப்பதால் மெடிக்கல் எமர்ஜென்சி கர்நாடக அரசுக்கு பா.ஜ., - எம்.பி., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 07, 2024 03:09 AM
பெங்களூரு: ''டெங்குவுக்கு குறிப்பிட்ட சிகிச்சை என்பது இல்லை. எனவே 'மெடிக்கல் எமர்ஜென்சி' அறிவிக்க வேண்டும்,'' என பெங்களூரு ரூரல் பா.ஜ., - எம்.பி.,யும், டாக்டருமான மஞ்சுநாத் வலியுறுத்தினார்.
மல்லேஸ்வரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
டெங்குவை கட்டுப்படுத்த வேண்டுமானால், முதலில் கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். மழைக்கால துவக்கத்தில் கொசுக்களால் பரவும் நோய், டெங்கு. டெங்குவை கட்டுப்படுத்தாவிட்டால், சிக்குன்குனியா, ஜிகா தொற்று பரவும்.
கர்நாடகா முழுதும் டெங்கு பரவுவதால், அவசர சிகிச்சை அவசியம். எனவே 'மெடிக்கல் எமர்ஜென்சி' அறிவிக்க வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்த 'தனி டாஸ்க் போர்ஸ்' அமைக்க வேண்டும். டெங்கு பரிசோதனைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால், ஆய்வகங்களை மூட வேண்டும்.
கொரோனா நேரத்தில், நோயாளிகளை எப்படி தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டதோ, அதேபோன்று டெங்குவுக்கும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் குணமாகும் வரை, பிளேட் லெட்ஸ் குறையும். உடலில் நீர் நிரம்பும். அவசியம் ஏற்பட்டவர்களுக்கு, உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்.
டெங்கு நோய்க்கு தேவையான மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை உள்ளது. கட்டுப்பாட்டு அறை மூலம், நோயாளிகளை கண்காணிக்க வேண்டும். முன்னேறிய நாடுகளில், அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி, நோயை தடுத்துள்ளனர்.
'மஸ்கிடோ ரெபலென்ட்ஸ்' என்ற ஸ்டிக்கர் வந்துள்ளது. இதை கர்நாடகாவிலும் பயன்படுத்தலாம். இதனால் குழந்தைகளை கொசுக்கடியில் இருந்து காப்பாற்றலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.