மத்திய நிதி அமைச்சரிடம் பா.ஜ., - எம்.எல்.ஏ., புகார்
மத்திய நிதி அமைச்சரிடம் பா.ஜ., - எம்.எல்.ஏ., புகார்
ADDED : ஜூலை 12, 2024 07:04 AM

பெங்களூரு: கர்நாடக அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களால், மாநிலத்தின் நிதிநிலை மோசமாக இருப்பதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் புகார் கொடுத்து உள்ளார்.
கர்நாடக அரசு பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம்; பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை; 200 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்தினால் இலவச மின்சாரம், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதம் 10 கிலோ இலவச அரிசி என, வாக்குறுதித் திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
இந்த வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு 60,000 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து வாக்குறுதி திட்டங்களால் அரசு வளர்ச்சி பணிகள் செய்யவில்லை என்றும், அரசின் கஜானா காலியாகி வருவதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் விஜயபுரா பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டில்லியில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
'கர்நாடகா அரசு அமல்படுத்தியுள்ள ஐந்து வாக்குறுதி திட்டங்கள், மாநிலத்தின் நிதி நிலைமையை பாதித்துள்ளது. வாக்குறுதி திட்டங்கள் மாநிலத்தின் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது. இதனால் மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'வாக்குறுதி திட்டங்கள் மாநிலத்தை எப்படி திவாலாக்கும் நிலைக்குத் தள்ளும் என்று, கர்நாடக நிதித்துறை தெளிவான அறிவுறுத்தல்கள் இருந்தும், மிகப்பெரிய தொகையில் பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்துள்ளார். இதனால் பொது செலவுகள், கடன்கள் மற்றும் பணவீக்கம் அதிகரிக்கிறது' என்று, நிர்மலா சீதாராமனிடம், பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறினார்.
கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரி, நிர்மலா சீதாராமனிடம் புகாரும் கொடுத்தார்.