ADDED : ஏப் 30, 2024 10:30 PM

ஆனேக்கல்: ''அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவண்ணா ஆவேசமாக கூறினார்.
பெங்களூரு ரூரல் ஆனேக்கல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவண்ணா அளித்த பேட்டி: கடந்த 26ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில், எனது தொகுதிக்கு உட்பட்ட சர்ஜாபூரில் காங்கிரஸ், பா.ஜ., தொண்டர்கள் இடையில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது.
எங்கள் கட்சியின் பூத் முகவர்கள் மது, அஞ்சினப்பா ஆகியோர், பெண் வாக்காளர்களுக்கு ஓட்டுச் சாவடி செல்லும் வழியை காட்டினர். ஆனால் காங்கிரசுக்கு ஓட்டு போடுமாறு பெண் வாக்காளர்களிடம் கூறுவதாக நினைத்து, பா.ஜ.,வினர் பிரச்னை செய்தனர். அந்த பிரச்னை அங்குடன் முடிந்துவிட்டது.
ஆனால் ஏதோ பெரிய பிரச்னை நடந்தது போல, மத்திய அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசி வருகின்றனர். தேர்தலில் பா.ஜ.,வினர் பிரச்னை ஏற்படுத்த பார்க்கின்றனர். அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்தால், நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.