பா.ஜ.,வின் 'பி டீம்' ஆக இருந்த ம.ஜ.த., கட்சி: ராகுல் கிண்டல்
பா.ஜ.,வின் 'பி டீம்' ஆக இருந்த ம.ஜ.த., கட்சி: ராகுல் கிண்டல்
ADDED : ஏப் 18, 2024 04:40 AM

லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக, நேற்று முதன் முறையாக கர்நாடகாவுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் வந்தார். மாண்டியா டவுன் மற்றும் கோலாரின் மாலுாரில் நடந்த பொதுக் கூட்டங்களில் அவர் பேசியதாவது:
சி.பி.ஐ., அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆளானவர்கள், தேர்தல் பத்திரம் மூலம், பா.ஜ.,வுக்கு நிதி செலுத்தியதால், அவர்கள் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ.,வின் 'பி டீம்' என்று, ம.ஜ.த.,வை பற்றி கூறினேன். அது உண்மை என்று நிரூபிப்பது போல, இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர்.
நாட்டில் சமத்துவமின்மையை அகற்றுவோம். விவசாயிகளுக்கு ஆதரவு விலை வழங்குவோம். கடனை தள்ளுபடி செய்வோம். ஏழை பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுப்போம். நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்.
எனது சிறிய வயதில் பாட்டி இந்திராவுடன், தங்கவயல் தங்க சுரங்கத்திற்கு வந்தேன். இங்கு வேலை செய்த தொழிலாளர்களுடன் பேசினேன். தங்க சுரங்க தொழிலாளர்கள், இப்போது விவசாயம் செய்கின்றனர்.
சமூக பாகுபாடுகள் பற்றி கேள்வி கேட்கும் போது, நாம் தாக்கப்படுவோம். நம்மை தாக்கினால் நாம், நல்லது செய்கிறோம் என்று அர்த்தம். தொழில் அதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த பணத்தில், நரேகா திட்டத்தை 25 ஆண்டுகள் செயல்படுத்தலாம்.
தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை. கர்நாடகாவில் ஐந்து வாக்குறுதி திட்டங்கள் மூலம், பெண்கள் பயன் அடைவதை எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
l கோலாரில் தன் மருமகனுக்கு 'சீட்' கிடைக்காதால் அப்செட்டில் இருந்த அமைச்சர் முனியப்பா; சிக்கபல்லாப்பூர் 'சீட்' கிடைக்காமல் வருந்திய, முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி பங்கேற்றனர்
l கோலார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, எட்டு சட்டசபை தொகுதிகளில் இருந்து தலா 50 பஸ்களில், தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். ஒரு பஸ்சுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. சாப்பாடு, குடிநீர், கை செலவு எல்லாம் இதில் அடக்கம்
l ராகுல், கார்கே இருவருமே கோலார் வேட்பாளர் கவுதம் பெயரை சொல்லவே இல்லை. காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று தான் கூறினர்.
- நமது நிருபர் -

