பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
ADDED : ஏப் 10, 2024 05:26 AM
பெங்களூரு : பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.
கர்நாடகாவில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடந்தது.
மாநிலம் முழுதும் 1,288 தேர்வு மையங்களில், மொத்தம், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் எழுதினர்.
அதன் பின், பாடம் வாரியாக விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மார்ச் 25ம் தேதி முதல், ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டனர். திருத்திய விடைத்தாள்களின் மதிப்பெண்ணை சரிபார்த்து, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பெண் வாரிய அலுவலகத்தில் இன்று காலை 10:00 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
காலை 11:00 மணிக்கு பின், https://karresults.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக முடிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நாளை காலையில், கல்லுாரி தகவல் பலகைகளில் முடிவுகள் ஒட்டப்படும்.
கர்நாடகாவில் நடப்பாண்டு முதல் பி.யு.சி., இரண்டாம் ஆண்டுக்கு மூன்று முறை தேர்வுகள் நடத்தப்படும். இன்று முதல் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
இதில், தேர்ச்சி பெறும் மாணவர்கள், தங்களுக்கு குறைவான மதிப்பெண் வந்துள்ளது என்று நினைத்தால், இரண்டாவது முறை மீண்டும் எழுதலாம். அதிலும், குறைவாக வந்தது என்று நினைத்தால், மூன்றாவது முறையும் எழுதலாம்.
தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும், இரண்டாவது, மூன்றாவது தேர்வை எழுதலாம். மதிப்பெண் சான்றிதழில், துணை தேர்வு என்று குறிப்பிடாமல், பொதுத்தேர்வு என்றே குறிப்பிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

