ADDED : ஆக 23, 2024 05:58 AM
கொப்பால்: காளை மாடு ஒன்று, தினமும் கோவிலை 35 முறை வலம் வந்து வணங்கும் அதிசய சம்பவம் கொப்பாலில் நடந்துள்ளது. இதை காண மக்கள் கூட்டம், கூட்டமாக வருகின்றனர்.
கொப்பால் காரடகியின், யரடோனா கிராமம் உள்ளது. இங்கு தேவம்மா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்கள் பெருமளவில் வந்து தரிசனம் செய்கின்றனர். காலை, மாலையில் பூஜைகள் நடக்கின்றன. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.
தேவம்மா தேவி கோவிலில், நான்கு நாட்களாக ஒரு அதிசயம் நிகழ்கிறது. ஒரு காளை, தினமும் இரவு கோவிலுக்கு வந்து, 35 முறை வலம் வருகிறது.
யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் திரும்பி செல்கிறது. இதை பார்க்க, கூட்டம், கூட்டமாக மக்கள் வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. ஆனால் காளை, மழையை பொருட்படுத்தாமல், கோவிலுக்கு வந்து வலம் வருகிறது. இதை சிலர் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ வேகமாக பரவியது.
இந்த காளை, கிராமத்தினருக்கு சொந்தமானது அல்ல. இங்குள்ள முருடேஸ்வரா கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டதாகும். கர்நாடகாவின் வட மாவட்டங்களில், காளைகளை கோவிலுக்கு நேர்ந்து விடும் நடைமுறை உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும், கடவுளுக்கு நேர்ந்து விடப்பட்ட காளைகளை காணலாம்.

