மகளிருக்கு மத்திய அரசு அதிகபட்ச முன்னுரிமை: பா.ஜ., - எம்.எல்.சி., பாரதி ஷெட்டி பெருமிதம்
மகளிருக்கு மத்திய அரசு அதிகபட்ச முன்னுரிமை: பா.ஜ., - எம்.எல்.சி., பாரதி ஷெட்டி பெருமிதம்
ADDED : மார் 28, 2024 10:41 PM

பெங்களூரு : ''மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின், கடந்த 10 ஆண்டுகளில் மகளிருக்கு அதிகபட்ச முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., பாரதி ஷெட்டி பெருமிதம் தெரிவித்தார்.
இதுகுறித்து, பெங்களூரு மல்லேஸ்வரத்தில், நேற்று அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சி அமலுக்கு வந்த பின், மகளிரின் வாழ்வாதாரத்துக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு; முத்தலாக் ரத்து; பலாத்காரம் செய்தவர்களுக்கு துாக்கு தண்டனை; முத்ரா திட்டத்தில் சுய தொழில் துவங்க கடனுதவி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, நாட்டில் 10.3 கோடி வங்கிக் கணக்குகள் இருந்தன. மோடி பிரதமர் ஆன பின், ஜன்தன் திட்டத்தில் 51.6 கோடி வங்கிக் கணக்குகள் உள்ளன. இதில், 28 கோடி மகளிரும் வங்கிக் கணக்கு துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில், 70 சதவீதம் வீடுகள், மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளன. விஸ்வகர்மா திட்டத்தில், மகளிர் தான் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனர்.
ஜன ஹவுஷதி மருந்தகங்களும் மகளிருக்கு முன்னுரிமை வழங்கி ஒதுக்கப்படுகின்றன. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 1,800 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில், உஜ்வலா திட்டத்தில், 35.57 லட்சம் சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின், மகளிருக்கு பாதுகாப்பு இல்லை. கடந்த ஓராண்டில் மட்டுமே 1.80 லட்சம் குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன. 31 சதவீதம் கொலை சம்பவங்கள்; 41 சதவீதம் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சி வந்த பின், கர்நாடகாவின் நிலை பாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மாநில தலைமை செயலகமான விதான் சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி, காங்கிரசார் அரசியல் செய்கின்றனர்.
மாளவிகா, துணை தலைவர், மாநில பா.ஜ.,

