ADDED : செப் 02, 2024 09:05 PM

வாரம் முழுதும் ஓய்வின்றி உழைக்கும் மக்கள், வார இறுதியில் சாமுண்டி மலைக்கு சென்று, சாமுண்டீஸ்வரி தேவியை தரிசித்து மனம் அமைதி மற்றும் நிறைவுடன் திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளனர். மலை ஏறி இறங்குவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
புது அனுபவம்
மைசூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நகரங்களின், 'பேவரிட்' ஆன்மிக தலம் சாமுண்டி மலை. மலையேற முடியாதவர்கள் வாகனங்களில் செல்கின்றனர். முடிந்தவர்கள் படிகளில் ஏறி சென்று, சாமுண்டீஸ்வரியை தரிசிக்கின்றனர்.
வார இறுதி நாட்களில், பாதயாத்திரையாக படிகளில் ஏறி சென்று, சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்வதை, பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.
தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள், சாமுண்டி மலையில் நடைபயிற்சி செய்கின்றனர்.
இங்கு உடற்பயிற்சி செய்வதால், மனதுக்கு அமைதி, நிம்மதி கிடைப்பதுடன், உடல் ஆரோக்கியமும் கிடைக்கிறது என்பதும், பலரின் அனுபவப்பூர்வமான உண்மை. எப்போதாவது வருவோருக்கு, ஓரளவு கஷ்டமாக தோன்றும். ஆனால் தினமும் செல்வோருக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும்.
ஒவ்வொரு படிகளாக நிதானமாக ஏற வேண்டும். சுற்றிலும் இயற்கை சூழலை ரசித்தபடி செல்ல வேண்டும். அப்படி சென்றால் படியேறுவது கஷ்டமாகவே தெரியாது.
அதிகாலை சிலுசிலுவென உடலை வருடி செல்லும் குளிர்ந்த காற்று, மிதமான வெளிச்சம், சுற்றிலும் கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கை காட்சிகளை ரசித்தபடி மலையேறி சென்றால், கர்நாடக காவல் தெய்வமாக விளங்கும் சாமுண்டீஸ்வரியின் தரிசனம் கிடைக்கும்.
இப்படியொரு அற்புத உணர்வுக்காகவே, தினமும் இங்கு நடை பயிற்சிக்கு வருகின்றனர்.
மைசூரு மக்களுக்கு சாமுண்டி மலை, கடவுள் அளித்த வரம் என்பது உண்மை. மைதானத்தில், 10 கி.மீ., ஓடினாலும் கிடைக்காத பலன், சாமுண்டி மலையை ஏறி, இறங்கினால் கிடைக்கும். சாமுண்டி மலையில் இப்போதும் அப்பழுக்கற்ற துாய்மையான காற்று கிடைக்கிறது.
இங்கு மூலிகை செடிகள் நிறைந்துள்ளன. இதை சுவாசிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இதே காரணத்தால் இங்கு பலரும் வருகின்றனர்.
சாமுண்டி மலையில் 700 படிகளை ஏறினால், நந்தி சிலை இருக்கும். அங்கு சிறிது நேரம் நின்றால், துாய்மையான காற்று உடலில் மோதும். சோர்வு பறந்தோடும்.
படிகளில் ஏறி மலையை அடைந்தால், உடல் மட்டுமல்ல, மனமும் புத்துணர்ச்சி பெறும். தினமும் அதிகாலை நடைபயிற்சிக்கு வரும் மைசூரு மக்களுக்கு, சாமுண்டி மலை ஆக்சிஜன் களஞ்சியமாக விளங்குகிறது.
இயற்கை சூழல்
தினமும் இங்கு நடை பயிற்சி செய்த பலருக்கு, ரத்த அழுத்தம், நீரிழிவு, சளி என பல நோய்கள் சரியானதாம். மன அமைதி, நிம்மதி அதிகரித்ததாம். துாய்மையான காற்றை சுவாசித்ததால், உடல் ஆரோக்கியமும் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.
பக்தர்களும் கூட வாகனத்தில் வருவதை விட, படியேறி மலைக்கு வருவதையே பெரிதும் விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பக்தி மட்டுமல்ல, இங்குள்ள இயற்கை சூழலும்தான். இளைஞர்கள், இளம் பெண்கள், வயதானவர்கள் என, பலரும் மலையேற விரும்புகின்றனர்.
பெங்களூரு, ராம்நகர், மாண்டியா, துமகூரு உட்பட அனைத்து நகரங்களில் இருந்தும் சாமுண்டி மலைக்கு வர, அரசு, தனியார் பஸ்களுக்கு பஞ்சமில்லை. சொந்த வாகனங்களிலும் வரலாம். மலை அடிவாரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, படியேறி சாமுண்டீஸ்வரியை தரிசிக்க செல்லலாம்.
சாமுண்டீஸ்வரிக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம். மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து, அம்பாளை தரிசிக்கின்றனர்.
- நமது நிருபர் -