ADDED : ஜூலை 10, 2024 04:38 AM

பெங்களூரு : ''கர்நாடகாவில் சுற்றுலாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதை மேம்படுத்த புளூ பிரின்ட் தயாரிக்க வேண்டும்,'' என, மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தினார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று, மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
புதிய சுற்றுலா கொள்கையை உருவாக்க முடிவு செய்து, விரிவான ஆலோசனை நடத்த வேண்டும். சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
உகந்த சூழ்நிலை
பல மாநிலங்களுக்கு சுற்றுலா, முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளாவை போன்று, நம்மால் சுற்றுலா துறையை மேம்படுத்த முடியவில்லை. சுற்றுலா வளர்ச்சிக்கான 'புளூ பிரின்டை' தயாரிப்பது அவசியம்.
சுற்றுலா உள்கட்டமைப்பு மிகவும் குறைவாக உள்ளது. சுற்றுலாவுக்கு உகந்த சூழலை உருவாக்கினால் தான், இங்கு முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் வருவர்.
சுற்றுலா வளர்ச்சிக்கான அனைத்து சாத்திய கூறுகளையும் மாவட்ட கலெக்டர்கள் கண்டறிய வேண்டும். தனியார் மட்டுமின்றி, அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய சுற்றுலா கொள்கையில் அனைத்து அம்சங்களும் உள்ளடக்கப்படும்.
சி.ஆர்.இசட்., எனும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் சட்டத்தால், கடலோர பகுதி வளர்ச்சியில் சில பிரச்னைகள் உள்ளன. இதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
'கர்நாடகா சுற்றுலா வணிக வசதி சட்டம் - 2015' முறையாக செயல்படுத்தினால், சுற்றுலா தலங்கள் வளர்ச்சி அடையும்.
மாஸ்டர் பிளான்
மாவட்டம் வாரியாக சுற்றுலா தலங்கள் கணக்கெடுப்பு, பாதுகாப்பு போன்றவைக்கான 'மாஸ்டர் பிளான்' தயாரிக்க வேண்டும். மூன்று மாதங்களில் இப்பணியை முடிக்க வேண்டும். 320 கி.மீ., கடற்கரை கொண்ட கர்நாடகாவில், சுற்றுலாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதை போதுமான அளவு பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்களில் சுற்றுலா தலங்களை, உள்ளூர் மக்களுடன் இணைந்து மேம்படுத்துங்கள்.
சுற்றுலா தலங்களை உள்ளூர் மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும். மாவட்டங்கள் உள்ள சுற்றுலா குறித்த புத்தகங்கள் வெளியிட வேண்டும்.
'நினைவு பரிசு திட்டங்கள்' செயல்படுத்தி உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் நினைவு சின்னங்களை தத்தெடுத்து, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளலாம்.
கடற்கரையில் மருத்துவ கல்லுாரிகள், துறைமுகங்கள், கோவில்கள் உட்பட பல முக்கிய இடங்கள் உள்ளன. ஆனால், ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று கூட இல்லை.
தனித்திட்டம்
கடலோரம், மலை பகுதிகளுக்கு தனித்திட்டம் தயாரிக்க வேண்டும். கடலோர சுற்றுலாவின் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். வரி வசூல் செய்ய, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். வேலை தேடி வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு செல்லும் கடலோர மாவட்ட மக்கள் நிலை மாற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆலோசனை நடத்தினர். இடம்: விதான் சவுதா, பெங்களூரு.