கார் கதவின் கண்ணாடியில் சிக்கி குழந்தை பரிதாப பலி
கார் கதவின் கண்ணாடியில் சிக்கி குழந்தை பரிதாப பலி
ADDED : மார் 12, 2025 01:11 AM

பலியா : உத்தர பிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோஷன் தாக்குர். இவர் சமீபத்தில் புதிய கார் வாங்கினார். அதற்கு பூஜை போடுவதற்காக தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார்.
குடும்பத்தினர் அனைவரும் பூஜையில் பங்கேற்றனர். ரோஷனின் ஒன்றரை வயது குழந்தை ரேயான்ஷ், காரின் உள்ளே அமர்ந்து கொண்டு, கதவு வழியாக தலையை வெளியே நீட்டி, அங்கு சுற்றித் திரிந்த குரங்குகளை வேடிக்கை பார்த்தான்.
அப்போது காருக்கு திரும்பிய குழந்தையின் தந்தை, இன்ஜினை இயக்கிய போது, திறந்திருந்த கார் கதவின் கண்ணாடி தானாக மேலே உயர்ந்தது. இதில் குழந்தை ரேயான்ஷின் கழுத்து சிக்கி உடனே மயக்க நிலைக்கு சென்றான். குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.
அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.