
கதைக்கு முக்கியத்துவம்
நான்கு நண்பர்கள், பார்ட்டி பிரியர்கள். இவர்களின் பார்ட்டி அவர்களின் குடும்பங்களுக்கு, பெரும் தலைவலியாக உள்ளது. இதற்கிடையே ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. இது நண்பர்களின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. இது விகாச பர்வா திரைப்படத்தின் சாராம்சமாகும். காமெடி, ஆக்ஷன், டூயட் போன்ற சினிமா கலாச்சாரத்தை தவிர்த்து, கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துள்ளனர். படக்குழுவினர் நல்ல கருத்துகளை கூறியுள்ளனர். ரோஹித் நாகேஷ், ஸ்வாதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சிலையால் பிரச்னை
நல்ல கதைகள் மூலமாக, ரசிகர்களை ஈர்க்க விரும்பும் இயக்குனர்களில், விக்கியும் ஒருவர். தற்போது இவர் இயக்கத்தில் திரைக்கு வர தயாராகும், காலா பத்தார் திரைப்படமும் மாறுபட்ட கதை கொண்டதாகும். இதில் நாயகன் ராணுவ வீரன். எதிராளிகளை ஒடுக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்துவிட்டு, ஊருக்கு திரும்புகிறார். இவரை தடபுடலாக வரவேற்கும் ஊர் மக்கள், அவரது சாதனையை நினைவு கூறும் வகையில் சிலை வைக்கின்றனர். அதன்பின் ஊரில் பிரச்னை ஆரம்பமாகிறது. அது என்ன என்பதை திரையில் பார்க்க வேண்டும். மனதுக்கு நெருக்கமான விஷயமாகும். படத்தை இயக்குவதுடன், நாயகனாகவும் விக்கி நடித்துள்ளார். நாயகியாக தன்யா நடித்துள்ளார்.
ஏன் இந்த தயக்கம்?
இளம் நடிகையர் ஒன்றிரண்டு படங்களில் நடித்த பின், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி நடிப்பை தொடர்கின்றனர். ஆனால், 41 வயதான நடிகை ரம்யா இன்னும் திருமணம் செய்யாமல் காலம் கடத்துகிறார். இது தொடர்பாக சமூக வலைதளத்திலும், சர்ச்சை நடக்கிறது. சமீபத்தில் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக, தகவல் வெளியானது. இது வதந்தியாம். ஸ்டார் நடிகர்களுடன் நடித்த இவர், பல ஹிட் படங்களை கொடுத்தவர். தமிழிலும் நடித்தவர். புகழின் உச்சியில் இருந்த போது, அரசியலுக்கு சென்றவர். அதன்பின் நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் ஸ்வாதி முத்தின மளே ஹனியே என்ற திரைப்படத்தை தயாரித்தார்.
அந்தமானை பாருங்கள்
கடந்த 1998ல், சிவராஜ்குமார் நடிப்பில், திரைக்கு வந்த அந்தமான் திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது. அதன்பின் அந்தமானில் கன்னட திரைப்பட படப்பிடிப்பு நடந்ததே இல்லை. 26 ஆண்டுகளுக்கு பின் சவுகிதார் படப்பிடிப்பு, அந்தமான் - நிகோபரில் நடந்துள்ளது. ஏற்கனவே 53 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளனர். அந்தமான் - நிகோபரில் இயற்கை எழில் மிகுந்த இடங்களில் பாடல் காட்சி உட்பட, பல்வேறு காட்சிகளை படமாக்கி உள்ளனர். நாயகன் பிருத்வி, நாயகி தன்யா ராம்குமார், சாயிகுமார், நடன இயக்குனர் முரளி மாஸ்டர் என, பலர் பங்கேற்றனர்.
தாமதம் ஏன்?
மதகஜா படத்துக்கு பின், ஸ்ரீமுரளி நடிப்பில் எந்த படமும் திரைக்கு வரவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின், அவரது நடிப்பில் பகீரா திரைக்கு வருகிறது. ஆகஸ்ட் 31க்கே திரைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் படப்பிடிப்பு தாமதமானதால், திட்டமிட்டபடி திரைக்கு கொண்டு வர முடியவில்லை. கன்னடம், தெலுங்கில் திரைக்கு வருகிறது. இதில் ஸ்ரீமுரளி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆக் ஷன் கதையாம். மங்களூரு, கோவா, ஹைதராபாத், விசாகப்பட்டினம் என, பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.
அம்மாவே தெய்வம்
உலகில் தாயை கடவுளுடன் ஒப்பிடுவர். இந்த அம்சத்தை வைத்து கொண்டு தாயினே தேவரு என்ற பெயரில், திரைப்படம் தயாராகிறது. தாய், மகளின் பாசப்பிணைப்பை விவரிக்கிறது. மூன்று அம்மாக்களை சுற்றிலும் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. பவ்யா, மாலாஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலாஸ்ரீ பவர்புல் போலீஸ் அதிகாரியாக, இதுவரை நடித்திராத வகையில் நடித்துள்ளார். படத்தில் மூன்று நாயகன், நாயகியர் உள்ளனர். இதில் ஒரு நாயகன், ஒரு நாயகியின் பெயர் ரகசியமாக வைத்துள்ளனர். ஹிருதய ஹாடிது படத்துக்கு பின், தாயினே தேவரு படத்தில் பவ்யாவும், மாலாஸ்ரீயும் இணைந்து நடித்து உள்ளனர்.