ADDED : ஆக 15, 2024 03:55 AM

பெங்களூரு : போவி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில், சி.ஐ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கர்நாடகாவில் எஸ்.சி., பிரிவில் போவி சமுதாயம் உள்ளது. முந்தைய பா.ஜ., ஆட்சியின்போது, சமூக நலத்துறைக்கு உட்பட்ட போவி மேம்பாட்டு ஆணையத்தில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த காங்., அரசு சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டது.
விசாரணையில் பயனாளிகளுக்கு, தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், கடன் தருவதாக மோசடி நடந்ததும், 60 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
முறைகேடு தொடர்பாக, போவி மேம்பாட்டு ஆணையத்தின் கண்காணிப்பாளராக இருந்த சுப்பப்பா, கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஆணையத்தின் பொது மேலாளராக இருந்த நாகராஜப்பா, நிர்வாக அதிகாரி லீலாவதி ஆகியோரை, சி.ஐ.டி., அதிகாரிகள் தேடுகின்றனர்.
விசாரணையில் சுப்பப்பா கொடுத்த தகவலின்படி, பெங்களூரு போவிபுராவில் உள்ள போவி மேம்பாட்டு ஆணையத்தின், தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மேல், சி.ஐ.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர். சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.