ஆதார் அட்டையுடன் வரவா? கங்கனா நிபந்தனைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!
ஆதார் அட்டையுடன் வரவா? கங்கனா நிபந்தனைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!
ADDED : ஜூலை 13, 2024 01:10 AM

மண்டி: 'என்னை சந்திக்க வருபவர்கள் ஆதார் அட்டையுடன் தான் வர வேண்டும்' என, பா.ஜ., - எம்.பி., கங்கனா ரணாவத் நிபந்தனை விதித்ததற்கு, காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பிரபல ஹிந்தி நடிகையான கங்கனா ரணாவத், ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'என்னை சந்திக்க வருபவர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டையுடன் வர வேண்டும்.
ஹிமாச்சல், சுற்றுலா பயணியர் அதிகம் வரக்கூடிய மாநிலம். என் தொகுதி மக்கள் சிரமத்தை சந்திக்கக் கூடாது என்பதற்காகவே, ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என கூறுகிறேன்.
'என்னை சந்திப்பதற்கான காரணத்தையும், பிரச்னையையும் காகிதத்தில் எழுதி வர வேண்டும். சுற்றுலா பயணியர் அதிகம் வருவதால், தொகுதியின் சாமானிய மக்கள் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதற்காகவே இந்த முடிவு.
'ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து வருபவர்கள் மணாலியில் உள்ள வீட்டில் என்னை சந்திக்கலாம். மண்டி தொகுதி மக்கள், அலுவலகத்தில் சந்திக்கலாம். உங்களது பணி தொடர்பாக என்னை நேரில் சந்திப்பது நலம்' என்றார்.
இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.
லோக்சபா தேர்தலில் கங்கனாவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் கூறுகையில், ''கங்கனா ஒரு மக்கள் பிரதிநிதி. எனவே, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதி மக்களையும் சந்திப்பது அவரது பொறுப்பு.
''எந்தவித பணியாக இருந்தாலும் சரி அல்லது கொள்கை விஷயம், தனிப்பட்ட வேலை என எதுவாக இருந்தாலும், அவரை சந்திப்பதற்கு எந்தவித ஆவணங்களும் தேவைப்படாது. தன்னை சந்திக்க வருபவர்களை, குறிப்பிட்ட ஆவணங்களை எடுத்து வந்தால் தான் சந்திப்பேன் எனக் கூறுவது சரியல்ல,” என்றார்.