மைசூரு பா.ஜ., - - எம்.பி.,யிடம் ஆதரவு கேட்ட காங்., வேட்பாளர்
மைசூரு பா.ஜ., - - எம்.பி.,யிடம் ஆதரவு கேட்ட காங்., வேட்பாளர்
ADDED : ஏப் 19, 2024 06:28 AM

மைசூரு: ''தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்காத பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹாவிடம் ஆதரவு கேட்டேன்,'' என்று, மைசூரு காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமண் கூறி உள்ளார்.
மைசூரில் அவர் அளித்த பேட்டி:
அரசியல்ரீதியாக எனக்கும், பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கும், கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் அரசியலை தவிர்த்து, நாங்கள் இருவரும் நண்பர்கள்.
சமீபத்தில் அவரை பெங்களூரில் சந்தித்தேன். இருவரும் ஒன்றாக அமர்ந்து காபி குடித்தோம். தேர்தலில் எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று, அவரிடம் கேட்டேன். இதில் என்ன தவறு உள்ளது.
லோக்சபா தேர்தலில் முதல்முறையாக போட்டியிடுகிறேன். எனக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அரசின் ஐந்து வாக்குறுதிகள் பற்றி, மக்கள் நல்லவிதமாக பேசுகின்றனர். மத்திய அரசு மீது, மக்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இது எனக்கு அனுகூலமாக இருக்கும். மைசூரு முதல்வரின் சொந்த ஊர். துணை முதல்வர் சிவகுமாருக்கும் இங்கு செல்வாக்கு உள்ளது.
மைசூரு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளில், ஐந்து தொகுதிகளில் எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
முதல்வர் சித்தராமையாவுக்கு வெற்றியை பரிசளிக்க, கடுமையாக உழைத்து வருகின்றனர்.
மைசூரு, குடகு மக்களின் பிரச்னைகளை நன்கு அறிவேன். சுற்றுலாவுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும், இங்கு கொண்டு வருவேன்.
மைசூரு தொகுதியில் போட்டியிட 47 ஆண்டுகளுக்கு பின்பு, ஒக்கலிகரான எனக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஒக்கலிகர்கள் என்னை வெற்றி பெற வைப்பர். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியால் பிரச்னை இல்லை. ம.ஜ.த.,வில் இருக்கும் ஒக்கலிகர்கள் கூட, எனக்கு ஓட்டு போடுவர் என்று நம்புகிறேன். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து, அரசியலுக்கு வந்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

