ADDED : மே 03, 2024 07:11 AM

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி குறித்து, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகேவுக்கு, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
பெலகாவி காகவாடா தொகுதி காங்கிரஸ் - எம்.எல்.ஏ., ராஜு காகே, நேற்று முன் தினம் ஊடகத்தினர் சந்திப்பில், 'பிரதமர் மோடி இறந்தால், அடுத்து யாரும் முதல்வர் ஆகமாட்டார்களா, 140 கோடி மக்கள் தொகையில், பிரதமர் வேட்பாளர் யாரும் இல்லையா' என கேள்வி எழுப்பினார். இது சர்ச்சைக்கு காரணமானது. பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறியதாவது:
ராகுலின் மனநிலை, ராஜு காகேவின் பேச்சில் வெளிப்பட்டுள்ளது. இறப்புகளின் அடிப்படையில், அதிகாரத்துக்கு வந்த காங்கிரசார், மற்றவரின் இறப்புக்காக காத்திருக்கின்றனர். அந்த கட்சியின் கலாசாரம் வக்கிரமானது.
பிரதமர் மோடியின் இறப்பை, காங்கிரஸ் ஏன் விரும்புகிறது. சட்டம் 370ஐ ரத்து செய்து, இந்தியாவின் மணிமகுடம் காஷ்மீரை காப்பாற்றியதற்கா, 50 ஆண்டுகள் இந்தியர்களின் கனவை நிறைவேற்ற, ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டியதற்கா, நாட்டை அச்சுறுத்திய பயங்கரவாதத்தை வேருடன் பிடுங்கி எறிந்து, நாட்டை காப்பாற்றியதற்கா.
உலகில் இந்தியாவை பொருளாதார ரீதியில், ஐந்தாவது இடத்துக்கு கொண்டு வந்து, வலிமையான நாடாக்கியதற்கா. வளர்ச்சி ஓட்டத்தில், இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியதற்கா, நாட்டின் கடைகோடி நபரும் தன்மானத்துடன் வாழ, பல திட்டங்களை செயல்படுத்தியதற்கா, நேர்மையாக, திறமையாக நல்லாட்சி அளித்து, மக்களிடம் பாராட்டு பெற்றதற்கா.
பா.ஜ., நபரை மையமாக கொண்டு வளர்ந்த கட்சியல்ல. கொள்கை, சித்தாந்தங்களின் அடிப்படையில் வளர்ந்து நின்றுள்ள கட்சி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தகட்சியாகும்.
சாதாரண தொண்டராக இருந்து, பிரதமர் பதவி வரை உழைப்பால் உயர்ந்தவர் மோடி.
நாட்டை வலிமையாக்கும் இவர், மீண்டும் பிரதமர் பதவிக்கு வருவார். இதை சகிக்காமல், காங்கிரசாரின் வாயில் அபசகுனமான வார்த்தைகள் வருகின்றன.
அழுக்கு மனம் உள்ளவர்களால் மட்டுமே, இப்படி பேச முடியும். தெய்வ பலமும், மக்களின் ஆசியும் மோடிக்கு பக்கபலமாக நிற்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.