கட்சியை மோடி காலில் வைத்து விட்டார் குமாரசாமியை சாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.,
கட்சியை மோடி காலில் வைத்து விட்டார் குமாரசாமியை சாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.,
ADDED : மார் 22, 2024 06:56 AM

ராம் நகர்: ''ம.ஜ.த., கட்சியை பிரதமர் மோடியின் காலில் வைத்து, ஒக்கலிகர்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்,'' என்று, முன்னாள் முதல்வர் குமாரசாமியை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா சாடி உள்ளார்.
ராம்நகர் மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா அளித்த பேட்டி:
நான் முதல்முறை கடந்த 1999ல், மாகடி தொகுதியில் இருந்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஆனேன். அந்த கட்சியில் இருந்து கொண்டே, குமாரசாமியை ஆதரித்தேன். பின்னர் பா.ஜ.,வில் இருந்து விலகி, ம.ஜ.த.,வில் இணைந்து மூன்று முறை எம்.எல்.ஏ., ஆனேன்.
குமாரசாமி 2006ல் முதல்வரான போது, 'நான் முதல்வராக பாலகிருஷ்ணா, செலுவராயசாமி, ஜமீர் அகமதுகான் காரணம்' என்று, சட்டசபையில் கூறினார். அவர் கூறிய மூன்று பேருமே, இப்போது காங்கிரசில் உள்ளோம். இதற்கு குமாரசாமியே காரணம்.
ம.ஜ.த., கட்சியின் கொள்கைகளை மறந்து, பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து உள்ளார். ம.ஜ.த.,வை ஒக்கலிகர்கள் ஆதரித்தனர். ஆனால் கட்சியை பிரதமர் மோடியின் காலடியில் வைத்து, ஒக்கலிகர்கள் நம்பிக்கையை, குமாரசாமி இழந்து விட்டார்.
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியின் முதல்வராக, குமாரசாமி அறிவிக்கப்படுவாரா? அப்படி நடந்தால் நாங்கள் அவருக்கு ஆதரவு தருகிறோம். லோக்சபா தேர்தலில் வெறும் இரண்டு இடங்களை பெற தான், பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு சென்றாரா?
குமாரசாமி எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும், நிம்மதியாக இருக்க மாட்டார்.
இன்னும் ஒரு மாதம் கழித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குமாரசாமியிடம் எப்படி மோசமாக நடந்து கொள்கின்றனர் என்பதை, மக்கள் பார்க்க போகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

