'ஜூன் 4க்கு பின் ஊழல்வாதிகள் சிறைக்கு செல்வது நிச்சயம்': பிரதமர் மோடி
'ஜூன் 4க்கு பின் ஊழல்வாதிகள் சிறைக்கு செல்வது நிச்சயம்': பிரதமர் மோடி
ADDED : மே 19, 2024 11:20 PM

புருலியா: “லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4ம் தேதிக்கு பின், 'இண்டியா' கூட்டணியில் உள்ள ஊழல்வாதிகளுக்கு சிறை நிச்சயம்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் உள்ள மேதினிபூர், பங்கூரா உள்ளிட்ட எட்டு தொகுதிகளுக்கு ஆறாம் கட்டமான வரும் 25ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
நடவடிக்கை
இதையொட்டி, அங்குள்ள புருலியா, பிஷ்ணுபூர் ஆகிய தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தேர்தலில் வெற்றி பெற இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தினர். ஆனால், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
மதத்தின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு வழங்க அந்த கூட்டணி விரும்புகிறது. சரஸ்வதி பூஜை கொண்டாடும் மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் திரிணமுல் காங்கிரஸ் ஊழல் செய்துள்ளது.
ஊழல் செய்தவர்கள் சிறைக்கு வெளியே இருக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜூன் 4க்கு பின், ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வது நிச்சயம்.
அவர்கள் மீதான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், ராமகிருஷ்ண மடம், பாரத சேவஷ்ராம் சங்கத்திற்கு எதிராக கட்டுக்கதைகளை பரப்பிவிட்டு அனைத்து எல்லைகளையும் திரிணமுல் காங்கிரஸ் மீறிவிட்டது. சேவை செய்யும் இந்த அமைப்புகளுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பகிரங்க மிரட்டல் விடுக்கிறார். ஓட்டு வங்கிக்காக எங்கள் நம்பிக்கையை அவர் அவமதிக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதலீடு
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் பேசிய பிரதமர், காங்கிரஸ் எம்.பி., ராகுலை சாடினார். ''வாரிசு அரசியலை காங்., ஆதரிக்கிறது. அக்கட்சியின் இளவரசர் பயன்படுத்தும் மொழியைப் பார்த்தால், காங்., ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன்பாக தொழிலதிபர்கள் 50 முறையாவது யோசிப்பர்.
''ஏனென்றால், மாவோ யிஸ்ட்கள் பேசும் மொழியை இளவரசர் பயன்படுத்துகிறார். புதுமையான முறையில் பணத்தை பறிக்க திட்டமிடுகிறார்,'' என பிரதமர் விமர்சித்தார்.

