பானை பெயரில் மோசடி
பெங்களூரு ஜெயநகரில் வசிப்பவர் 55 வயது தொழில் அதிபர். இவருக்கு, சிவசங்கர் என்பவரின் பழக்கம் கிடைத்தது. என்னிடம் அதிர்ஷ்டம் தரும் ஒரு பானை உள்ளது. அந்த பானையை 1 கோடி ரூபாய்க்கு விற்க உள்ளேன். உங்களுக்கு வேண்டும் என்றால் 70 லட்சம் ரூபாய்க்கு தருகிறேன் என்று, தொழில் அதிபரிடம், சிவசங்கர் கூறினார். இதை நம்பிய அவர், பானையை வாங்க 70 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால் பானையை கொடுக்காமல், சிவசங்கர் மோசடி செய்தார். தொழில் அதிபர் அளித்த புகாரில் சிவசங்கர், அவரது கூட்டாளிகளான பஞ்சாப்பின் சன்னி கில், தமிழகத்தின் கிருஷ்ணகிரி ரமேஷ் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 69.79 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு பித்தளை பானை பறிமுதல் செய்யப்பட்டன.
மோசடி வழக்கில் 6 பேர் கைது
பெங்களூரு ஜெயநகரில் வசிப்பவர் நாகேஷ். இவரது பெயரில் ஒரு கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தின் ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து, கடன் வாங்கினார். அந்த கடனை அவர் கட்டவில்லை. அதன்பின்னர் கட்டடத்தின் பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கி, பல வங்கிகளில் 10 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.
கடனை திரும்ப செலுத்ததாதால், ஜெயநகர் போலீஸ் நிலையத்தில், நாகேஷ் மீது புகார் பதிவானது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். விசாரணையில் போலி ஆவணங்கள் தயாரிக்க, உறவினர்களான சுமா, சதீஷ், வேதா, ஷோபா, சேஷாத்திரி உதவியது தெரிந்தது. இதனால் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

