ADDED : ஜூலை 23, 2024 01:45 AM
மும்பை, பராமரிப்பு பணியின் போது, ஐ.என்.எஸ்., போர்க்கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, ஐ.என்.எஸ்., பிரம்மபுத்ரா ஏவுகணை போர்க்கப்பல், 2000 ஏப்ரலில் நம் கடற்படையில் இணைக்கப்பட்டது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் பராமரிப்பு பணிக்காக நேற்று முன்தினம் ஐ.என்.எஸ்., பிரம்மபுத்ரா போர்க்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, போர்க்கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள், கப்பல் பணியாளர்கள் இணைந்து தீயை அணைத்தனர்.
இது குறித்து, நம் கடற்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'பராமரிப்பு பணியின் போது ஐ.என்.எஸ்., பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ, நேற்று காலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், கப்பலின் ஒரு பகுதி கடற்படை தளத்தில் மூழ்கியது. இளம் மாலுமி ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி நடக்கிறது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

